பொம்மை போல செயல்படும் காவிரி ஆணையம்.! அதிகாரமிக்க ஆணையம் அமைய வேண்டும்.. மணியரசன் ஆவேசம்
திருவாரூர்: அதிகாரம் மிக்க காவிரி ஆணையத்தை அமைக்க தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்காதே.. காவிரியை தடுக்காதே! என்ற முழக்கத்துடன் காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் டெல்டா விவசாயிகள் என ஏராளமானோா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் பங்கேற்றார். பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவரி என்பது தமிழகத்தின் உரிமை, அதை தடுக்க யாருக்கும் எந்த தகுதியும் இல்லை.
மேலும் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் காவிரி ஆணையமானது பொம்மையை போல செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கண்துடைப்பு பொம்மை ஆணையமானது, கர்நாடகத்திடம் தண்ணீர் கொடுங்கள் என்று சொல்வதோடு சரி, அதோடு அதன் வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர சொன்னோமே ஏன் நாங்கள் உத்தரவிட்டபடி திறக்கவில்லை, என்று கர்நாடகத்திடம் கேள்வி எழுப்பி தண்ணீரை பெற்றுக் கொடுக்கும் உயிரோட்டமுள்ள ஆணையமாக செயல்டபவில்லை. எனவே தான் அரசு அதிகாரியை தலைவராகவும், அலுவலர்களாகவும் நியமிக்க வேண்டும். இதை தமிழக அரசு உச்சநீதிமன்றம் மூலம் வலியுறுத்தி பெற வேண்டும்.
தற்போதைய காவிரி ஆணையத்தை கலைத்துவிட்டு, புதிய காவிரி ஆணையத்தை அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
உரிய தண்ணீரை அளிக்காமல் மண்ணை தரிசாக்கிவிட்டு, ஹைட்ரோ கார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை தாரை வார்க்கிறது மத்திய அரசு. இதற்கு மீத்தேன் எடுக்க தடை விதித்த ஜெயலலிதா பெயரில் இயங்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும், துணை போகிறது என சாடியுள்ளார்.
மறைந்த ஜெயலலிதா மீது தற்போதைய தமிழக அரசு உண்மையிலேயே மதிப்பும், மரியாதையும் வைத்திருக்குமானால், அவர் போட்ட தடையை மீறி மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுமா என மணியரசன் வினவியுள்ளார்.
பொம்மை ஆணையமாக செயல்பட்டு வரும் தற்போதைய காவிரி ஆணையம், கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாக செயல்படுகிறதே தவிர தமிழக உரிமையை நிலைநாட்டும் வகையில் செயல்படவில்லை. எனவே தற்போதைய ஆணையத்தை கலைத்து விட்டு அதிகாரமுள்ள ஆணையம் அதாவது நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா நதிகள் விவகாரத்தில் எப்படி அதிகாரமிக்க ஆணையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகிறதோ அது போல காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நேரில் சென்று சந்தித்த மணியரசன், கைது நடவடிக்கைக்கு காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தார்.