திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்.. 450 விவசாயிகள் மீது வழக்கு
திருவாரூர்: திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற, 450-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் சுமார் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குளத்தில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்று ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கமிடுதல், விளை நிலங்களில் நின்று ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு போராட்டத்தை விவசாயிகளும் பொதுமக்களும் முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும், மக்களின் வாழ்வாதாரங்களைப் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஜூன் 1 தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
எந்த முகத்தை வைத்து கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்போம்.? ராஜேந்திர பாலாஜி புலம்பல்
ஆனால் விவசாயசங்கத்தினரின் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. எனினும் சோர்ந்து விடாத விவசாய சங்கத்தினர் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி காவல்துறையினரின் தடையையும் மீறி, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
திருவாரூர், கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் விவாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கைகளில் காலி மண்பானைகளை ஏந்தி கோஷமிட்டனர். தடைமீறி போராட்டம் நடந்ததால், திருவாரூர் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்ற இடங்களை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
திருவாரூரில் போராட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் நாகை மாவட்டத்திலும் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இப்போரட்டத்திற்கு போலீசார் தடையும் விதிக்கவில்லை. ஆனால் போராட்டத்தின் போது கருப்பு கொடி வைத்திருந்தால் கைது செய்வோம் என விவசாயிகளை எச்சரித்திருந்தனர்.
எனினும் திருவாரூரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மக்கள் விரோத திட்டங்களான ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச்சாலை, கெயில் குழாய் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்யக் கோரி வரும் ஜூன் 12ம் தேதி, பேரிழப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மரக்காணத்திலிருந்து புதுச்சேரி, திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் வரையில் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 600 கிமீ தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.