சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்
திருவாரூர்: சிறையிலிருந்து சசிகலா வெளியே வரக்கூடாது என்பதே டி.டி.வி.தினகரனின் எண்ணம் என அவரது தாய்மாமாவும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளருமான திவாகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா. இந்நிலையில் அவர் சிறைக்கு சென்ற நாள் முதல் அதிமுகவிலும், அவரது குடும்பத்திலும் நாளுக்கு நாள் குழப்பங்களும், மோதல்களும் அதிகரித்துகொண்டே செல்கின்றன. அக்கா சசிகலாவிடம் தன்னை பற்றி டிடிவி தினகரன் தவறான தகவலை கூறிவிட்டார் என்பது திவாகரன் தரப்பு புகார்.
தொடக்கத்தில் தினகரனோடு இணைந்து செயல்பட்ட திவாகரன், ஒரு கட்டத்தில் பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகம் என்ற அந்தக் கட்சிக்கு தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். இதனிடையே மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், முதலீடுகளை ஈர்க்க செல்வதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஜாலி டூர் அடித்து திரும்பியுள்ளதாக விமர்சித்தார்.
டீ கொண்டு வந்து கொடுத்த எம்.பி...! திமுக முப்பெரும் விழாவில் ருசிகர நிகழ்வு
மேலும், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதைச் செய்யாமல் முதலீடுகளை பெறுகிறோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார். காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கத் தவறிவிட்டு இஸ்ரேல் சென்று நீர் மேலாண்மையை பார்வையிடுவது எப்படி பயன் தரும் என வினவினார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க தினகரன் தடையாக உள்ளார் என்றும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தினகரனின் செல்வாக்கு என்ன என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், சசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை எனவும் ஆவேசம் காட்டினார்.