தமிழிசை சொன்னது சரியா போச்சு... "5000 போச்சே" திருவாரூரிலிருந்து புலம்பல் குரல்!
ஓட்டுக்கு பணம் தருவது நின்றுபோய்விட்டதாக சிலர் புலம்பி வருகின்றனர்.
Recommended Video
திருவாரூர்: "போச்சே... போச்சே... ஐயாயிரம் போச்சே..." என்று திருவாரூரில் சிலர் புலம்பு வருகின்றனர்.
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இடைத்தேர்தலை சந்திக்க சில கட்சிகள் வேட்பாளரை அறிமுகப்படுத்தியது. சில கட்சிகள் வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என ஆலோசனையில் இறங்கியது. இவ்வளவையும் இந்த கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க கோரி கோர்ட்டில் வழக்கு போட்டுவிட்டு செய்து கொண்டிருந்தன.
நோட்டுக்கு ஓட்டு
இந்நிலையில் நேற்று இடைத்தேர்தல் ரத்தானது. இதைக் கேட்டதும் தொகுதியில் உள்ள சிலருக்கு தூக்கி வாரிப்போட்டதாம். ஏனெனில் தேர்தல் நடத்தப்பட்டால், நோட்டுக்கு ஓட்டு என்று சிலர் சொல்லி நம்பிக்கையை எக்கச்சக்கமாகவே இவர்களுக்கு ஊட்டி விட்டுள்ளனர்.
பணப்புழக்கம்
ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியின்போது பணப்பட்டுவாடா பற்றிதான் பேச்சாக இருந்தது. இதற்காகதான் அந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டு மறுபடியும் நடந்து முடிந்தது. அதேபோல, இந்த இடைத்தேர்தலிலும் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது.
கரன்சி நோட்டுகள்
திருவாரூர் தொகுதி என்பதால், ஒரு பக்கம் சொந்த தொகுதியை தக்க வைத்து கொள்ள ஒரு கட்சியும், சொந்த மாவட்டத்தில் தோத்து விடக்கூடாது என்று மற்றொரு கட்சியும் கரன்சிகளை இறக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பி சிலரும் "ஓட்டுக்கு இவ்வளவு என்றால், குடும்பத்துக்கு இவ்வளவு கிடைக்கும்" என்ற நினைப்பில் திளைத்து காத்து கிடந்தனர்.
மண்ணை வாரி போட்டது
அதாவது ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்ற கணக்கையும் போட்டு குதூகலத்துடன் நடமாடி வந்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் ரத்து என்று சொல்லி நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டதால், அதனை தாங்க முடியவில்லையாம்.
|
டோக்கன்
இதெல்லாம் போதாதென்று, நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை, "டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார்.
வெறும் ஆயிரம்தான்
தமிழிசை இதனை யாரை மனதில் வைத்து சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் "5 ஆயிரமும் சேர்ந்து வரும்னு நினைச்சோமே... இப்படி வெறும் பொங்கலுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் கிடைச்சிருக்கே" என்று சிலர் மாவட்டத்தில் பொருமி வருகிறார்களாம்.