மானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயிரிடுவதில் ஆர்வம்
திருவாரூர்: மானியத்தில் விதை கொடுத்தும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ரக நெல்லை பயிரிடுவதிலேயே, தமிழக விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆந்திர பொன்னி என்.எல்.ஆர், ஆர்.என்.ஆர் உள்ளிட்ட ரக நெல் வகைகளை நடவு செய்வதில் தமிழக விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. திருவாரூர், தஞ்சை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சம்பா நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தும் நெல் ரகங்களை தவிர, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கோவை ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை அம்பாசமுத்திரம், பரமக்குடி, திருச்சி உள்ளிட்ட தமிழக ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை 90 முதல் 125 நாட்கள் வரையிலான சன்னம் மற்றும் மோட்டா ரகங்கள் ஆகும். ஆனால் ஆந்திராவில் உள்ள பாபட்லா ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட ஆந்திரா பொன்னி, தொடர் மழை மற்றும் பனியால் பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளானாலும், அதிக உற்பத்தி மற்றும் கொள்முதல் விலை போன்றவற்றால் விவசாயிகளை ஈர்த்துள்ளது.
மேலும் இதன் சுவை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. அதே போல தெலுங்கானா ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்ட, என்.எல்.ஆர் ஆர்.என்.ஆர் ஆகிய நெல் ரகங்களும் தமிழக விவசாயிகளை ஈர்த்துள்ளன.
மானியத்தில் வழங்கப்படும் தமிழக நெல் ரகங்களை புறக்கணித்துள்ள விவசாயிகள் ஆந்திர மற்றும் தெலுங்கானா ரக விதைகளை, தனியார் கடைகளில் வாங்கி அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வேளாண் அதிகாரிகள், தமிழகத்தில் 90 சதவீதம் ஆந்திரா நெல் ரகங்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆந்திரா பொன்னி பயிர் வளர்ந்தாலும் மழை தண்ணீர் ஓடினால் சாயாது. மேலும் அதிக கொள்முதல் விலையால், நம் விவசாயிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாரம்பரிய ரகங்களை தவிர ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ரகங்கள் சந்தைக்கு ஏற்ப விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால், விவசாயிகள் விலை கொடுத்து ஆந்திர மற்றும் தெலுங்கானா ரக விதைகளை ஆர்வமுடன் வாங்கி சாகுபடி செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.