சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை யார் - பிடி கொடுக்காமல் பேசிய முதல்வர் பழனிச்சாமி
சட்டசபை தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றியும் யார் தலைமை என்றும் முடிவு செய்ய முடியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருவாரூர்: சட்டசபை தேர்தல் வரும் போதுதான் கூட்டணி பற்றியும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பது பற்றியும் முடிவு செய்ய முடியும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என்றும் இரட்டை இலக்க எண்களின் அடிப்படையில் போட்டியிடுவோம் என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சராசரியாக தினமும் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. திருவாரூரில் தற்போது 460 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூரில் 2,231 காய்ச்சல் முகாம்களில் 1,73,866 பேர் பயன் பெற்றுள்ளனர். சிறப்பு குறைதீர் திட்டத்தில் பெறப்பட்ட 25,861 மனுக்களில் தகுதியான 13,178 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிர் 4,445 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு குறைதீர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 3,377 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 8,321 சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.588 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், கொரோனா தொற்றால் நாம் சோதனையான காலத்தில் இருக்கிறோம். இருப்பினும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததின் பயனாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இறப்பின் விகிதம் குறைந்துள்ளது. மக்கள் அரசு சொல்லும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே தமிழகம் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விடும்.
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி முக்கிய தகவல்
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மக்களிடையே கொண்டு செல்லவும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தன்னலம் பாராமல், சுயநலமின்றி அரசு அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர், தூய்மை பணியாளர்கள், வருவாய், சுகாதார துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.
அரசு அறிவிப்புக்கு உறுதுணையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வேதனையை அளிக்கிறது. அவர்களுக்கு அரசின் சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது நோய் தொற்ற வாய்ப்பு ஏற்படும் என தெரிந்தும், அரசின் அறிவிப்புக்கு ஏற்ப பணியில் ஈடுபட்டு தொற்றால் உயிரிழந்த அலுவலர்களின் பணி தன்னலமற்றது. அவர்களது குடும்பத்துக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கூறினார். பாஜக தலைமையில் கூட்டணி அமையும் என்று கூறி வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கிறது. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவு செய்ய முடியும்.
முதலில் தேர்தல் வரட்டும், அதன் பிறகுதான் யாருடன் கூட்டணி யார் தலைமை என்பது பற்றி முடிவு செய்வோம் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என்றும் இரட்டை இலக்க எண்களின் அடிப்படையில் போட்டியிடுவோம் என்றும் அது 99 இடங்களாக கூட இருக்கலாம் என்றும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அனைவருக்குமே பதில் சொல்லும் வகையில் அமைந்துள்ளது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதில்.