கஜா புயல் மீட்பு பணிக்கு ராணுவத்தை அனுப்பாதது ஏன்? நிர்மலா சீதாராமன் சொல்வதை பாருங்க
Recommended Video
திருவாரூர்: கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக தமிழக அரசு ராணுவ உதவி கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை பார்வையிட்டார்.
ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை கோடியக்கரைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மக்களுடன் சந்திப்பு
அதன் பின்னர் அங்கிருந்து வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆற்காட்டுத்துறை, நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்து, அவர்களுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வீடுகள் கட்டித்தருவோம்
புயலால் வீடுகளை இழந்துள்ளவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ராணுவம் வரவில்லை
திருத்துறைப்பூண்டி, திருவாரூரிலும் நிர்மலா சீதாராமன் ஆய்வுகளை மேற்கொண்டார். திருவாரூரில் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் பேசுகையில், கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை என்றார். ஒக்கி புயல், குரங்கணி காட்டுத் தீ பிரச்சினைகளின்போது தமிழக அரசு கேட்டதால் ராணுவம் வந்து உதவியது என்றும், இப்போது அப்படியான கோரிக்கையை மத்திய அரசுக்கு, தமிழக அரசு விடுக்கவில்லை என்றார்.
இப்போதும் ரெடி
இப்போது கேட்டாலும் ராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.