திருத்துறைப்பூண்டியில் துவங்கியது தேசிய நெல் திருவிழா.. திரளான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நெல் திருவிழா இன்று துவங்கியது. இன்று துவங்கியுள்ளது 13-வது தேசிய நெல் திருவிழாவாகும்.
இவ்விழாவின் போது மறைந்த மண்ணின் மைந்தர் நெல் ஜெயராமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விவசாயிகள் அமைதி பேரணி சென்றனர்.
நம் நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் தேசிய நெல் திருவிழா. நெல்லைப் பாதுகாப்போம் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், அண்மையில் காலமான நெல் ஜெயராமனால், தேசிய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக தேிய நெல் திருவிழா நடத்தப்பட்டது.
உயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற்கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு
உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் நெல் ஜெயராமன் மறைந்துவிட்டார் எனினும். கிரியேட் அமைப்பு சார்பில் தொடர்ந்து தேசிய நெல் திருவிழா நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் ஆகிய இருவருமே இல்லாத சூழலில், இன்று துவங்கி நாளை வரை இருநாட்களுக்கு 13-வது தேசிய நெல் திருவிழா நடைபெறுகிறது.இந்த நெல் திருவிழாவில் நம் நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவான கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், விவசாயத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, பருவகால மாற்றம், நீர் பற்றாக்குறை மற்றும் வேளாண் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதம் நடத்தப்பட உள்ளது. சர்வதேச அளவில் விளைவிக்கப்படும் நெல் ரகங்கள் குறித்து இந்த விழாவில் வேளாண் நிபுணர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். 2 நாள் நடக்கும் கண்காட்சியில் பங்கு பெறும் விவசாயிகளுக்கு உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்பில் விருதுகளும் வழங்கப்படுகிறது,
விவசாயிகள் சார்பாக பேரணியும் நடைபெற உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இந்த தேசிய நெல் திருவிழாவில் உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது, மேலும் நமது நெல்லைக் காப்போம் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் சுமார் 175 பாரம்பரிய நெல் ரகங்களிலிருந்து, தலா 2 கிலோ விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
நெல் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று, நெல்சாகுபடி குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு சாகுபடி செய்யும் இயற்கை விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கவும், கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.