களை கட்டியது திருவாரூர் தொகுதி.. எந்தெந்த கட்சிகளில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு தெரியுமா?
Recommended Video
திருவாரூர்: அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், திருவாரூர் தொகுதி களைகட்டியுள்ளது.
திருவாரூர் சட்டசபை உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாளை மறுநாள், 3ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 10ம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கு இறுதி நாளாகும்.
11ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 14ம் தேதி கடைசி நாளாகும். 28ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
திமுக, அதிமுக ரெடி
31ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றே அமலுக்கு வந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் பணியை திமுக மற்றும் அதிமுக உடனடியாக துவங்கியுள்ளது. இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்களை 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் வழங்கலாம் என்று இரு கட்சிகளுமே அறிவித்துள்ளன.
திமுகவில் யாருக்கு
திமுக சார்பில் திருவாரூரில் களம் காண போட்டி அதிகமாக உள்ளது. கருணாநிதி பதவி வகித்த தொகுதி என்பதால், எளிதாக வெற்றி பெறலாம் என்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில்
அதிமுகவிலும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட போட்டா போட்டி நிலவுகிறது. கடந்த முறை இதே தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட திருவாரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் போட்டியில் உள்ள முக்கியமானவர்கள்.
அமமுக
டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர், திருவாரூர் நகர செயலாளர் பாண்டியன் இருவரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனராம். எனவே, வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளில் அதிமுக, திமுக, அமமுக என மூன்று கட்சி தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி வரலாறு
1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில், அந்த ஆண்டு தேர்தலில் காங்கிரசும், பிறகு, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய இரு கட்சிகளும் மட்டுமே திரும்ப, திரும்ப வெற்றி பெற்று வருகின்றன. திமுக அதிகபட்சமாக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 5 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்த பெருமை கொண்ட அதிமுகவால், திருவாரூரில் இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற முடியவில்லை.
மும்முனை போட்டி கேரண்டி
இம்முறை திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. திமுகவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு அளிக்க உள்ளன. அதில் மதிமுக, இ.கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் ஆதரவு திமுகவிற்கு என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டன. திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இன்றே, திரூவாரூர் தொகுதிகளில் களமாட தொடங்கியதை பார்க்க முடிந்தது. எனவே, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.