Exclusive: திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்காததற்கு அண்ணாமலை காரணம் இல்லை: பூண்டி கலைவாணன்
திருவாரூர்: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்ட முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் இது முழுக்க முழுக்க நகர்மன்ற கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவு தான் எனவும் கூறுகிறார் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைவாணன்.
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயரை சூட்டக் கூடாது எனக் கூறி பாஜக அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதும் திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை முதல்வர் நிறுத்தி வைக்கக் கூறியிருப்பதும் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக என்னதான் நடந்தது என்பதை அறிவதற்காக திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைவாணனை நாம் தொடர்புகொண்டு பேசினோம்.
அப்போது அவர் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட தகவல் வருமாறு;
”எட்டப்பன்... இனத்துரோகி...” பழ.நெடுமாறனை விமர்சித்து 2008-லேயே காட்டமாக கவிதை எழுதிய கருணாநிதி
நகராட்சி தீர்மானம்
''திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரை சூட்ட வேண்டும் என கடந்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி நகர்மன்றக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் 12-ம் தேதி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை. ஆரம்பத்திலேயே அவர் இதில் ஆர்வம் காட்டவில்லை. அவர் இதில் ஆர்வம் காட்டியிருந்தாலோ அல்லது தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரை சூட்ட விரும்பியிருந்தாலோ இந்த தீர்மானத்தை சுட்டிக்காட்டி இந்நேரம் சட்டமன்றத்திலேயே அறிவித்திருப்பார்.''
ஆர்வம் காட்டவில்லை
''ஆனால் முதல்வர் ஸ்டாலின் அப்படி செய்யவில்லை. எதுக்குப்பா இப்படி அவசரப்பட்டாங்க என்று தான் எடுத்ததுமே கேட்டார். அவர் நினைத்திருந்தால் எப்பவோ இந்த பெயர் மாற்றத்தை நொடியில் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்ய விரும்பவில்லை, திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கலைஞர் பெயரை சூட்டவும் ஆர்வம் காட்டவில்லை. உண்மையான நிலவரம் இப்படி இருக்கும் போது வெற்று விளம்பரத்துக்காக அரசியலில் தனது இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அண்ணாமலை ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.''
நாங்க நினைத்திருந்தால்
''தமிழ் கொடியேந்தி இதே வீதியில் நடமாடியவர் கலைஞர், உலகம் அறிந்த ஒருவரது பெயரை பெயரை வைக்கக் கூடாதென்று ஊர் பெயர் தெரியாதவர்கள் எல்லாம் கூறுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. மே 10 வரை சட்டமன்றம் நடைபெற்றதுஉங்களுக்கும் தெரியும். இந்த அறிவிப்பை வெளியிட முதல்வருக்கு எவ்வளவு நேரம் ஆகும், சொல்லுங்கள், ஆனால் அதை அவர் செய்யவில்லையே. முதலில் உங்களை போன்ற ஊடக நண்பர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். ஏப்ரல் 11-ம் தேதி திருவாரூர் நகர்மன்ற கவுன்சிலில் நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆரம்பத்திலேயே அவர் ஆர்வம் காட்டவில்லை.''
சம்பந்தமில்லை
''இதனால் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் தான் திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு கலைஞர் பெயரை சூட்டும் தீர்மானத்தை அரசு நிறுத்தி வைத்ததாக தயவு செய்து எண்ண வேண்டாம். கலைஞர் பெயரை சூட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்கு தெரியும். ஆனாலும் அவர் ஒரு விளம்பரத்துக்காக ஆர்ப்பாட்டத்தை நடத்தி ஏதோ தன்னால் தான் இது நடந்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.''