இருளில் கலங்கிய மாணவிகள்.. சோலார் பேனலோடு வந்து ஒளி ஏற்றிய ஆசிரியர்.. நெகிழ்ச்சி சம்பவம்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மின்வசதி இன்றி கஷ்டப்பட்ட மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் உதவி செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்ட முத்துப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியராக இருக்கும் செல்வம் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறார். ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியராக இருக்கும் இவர் அந்த பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
அந்த பள்ளிக்கூட வகுப்பறைக்கு கணினி வாங்கி கொடுத்து, பெரிய திரைகள் அமைத்து, இணைய வசதி கொண்டு வந்து டிஜிட்டல் வகுப்பறையாக மாற்றி உள்ளார். மாணவ, மாணவியருக்கு பல புதிய வசதிகளை ஏற்படுத்தி பள்ளிக்கூடத்தின் தரத்தை ஆசிரியர் செல்வம் உயர்த்தி உள்ளார்.
பெகாசஸ் மென்பொருளை வாங்கியது மத்திய அரசா? உச்சநீதிமன்றம் அமைத்த குழு எதனை எல்லாம் விசாரிக்கும்?
மாடல் பள்ளி
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிதான் என்றாலும் கூட இணைய வசதி, ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள் மூலம் அந்த பள்ளி சர்வதேச தரத்திற்கு உயர்ந்து உள்ளது. மாணவர்களுக்கு சீருடை எடுத்து கொடுப்பது, கஷ்டமான பின்னணி கொண்ட மாணவ, மாணவியருக்கு பொருளாதார உதவி பெற்று தருவது, பள்ளி முடித்து செல்லும் மாணவ, மாணவியரின் மேல்படிப்பிற்கு உதவி செய்வது என்று அடுக்கடுக்காக உதவிகளை செய்து வருகிறார். இதனால் சமூக வலைத்தளத்திலும் ஆசிரியர் செல்வம் கவனிக்கப்பட்டு வருகிறார்.
பள்ளி இடை நிற்றல்
இதில் பெரும்பாலான உதவிகளை தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறது, முடியாத பட்சத்திலும் இணையத்திலும், பல்வேறு அமைப்புகளிடமும் நிதி பெற்று ஆசிரியர் செல்வம் உதவி செய்து வருகிறார். பொருளாதார ரீதியான உதவிகளை தாண்டி மாணவ, மாணவியருக்கு கல்வியில் உதவி செய்வது. இடை நிற்கும் மாணவர்களை நேரடியாக வீட்டிற்கு சென்று அழைத்து பள்ளியில் சேர்ப்பது போன்ற பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறாராம்.
மின்வசதி கஷ்டம்
இந்த நிலையில்தான் மின்சார வசதி இன்றி தனது பள்ளியில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த மாணவியர் வீட்டிற்கு சோலார் மின் வசதியை இவர் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆசிரியர் செல்வம் செய்துள்ள ட்வீட்டில், எம்பள்ளியின் மாணவியர் இருவர் தந்தையை இழந்து தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்கள் அவர்கள் வீட்டில் மின்வசதி இல்லை, மின்வசதி பெற சாத்தியக்கூறு இல்லை. அவர்களுக்கு இன்று சோலார் மின்வசதி ஏற்படுத்தி தந்தேன். கல்வி அவர்கள் வாழ்வில் வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கையோடு என்று குறிப்பிட்டுள்ளார்.
பலர் கஷ்டப்படுகிறார்
அந்த மாணவிகள் மின்வசதி இல்லாமல் கஷ்டப்பட்டது தெரிந்ததும், மின் இணைப்பு ஏற்படுத்த வாய்ப்பு இல்லாத காரணத்தால், உடனடியாக சோலார் பேனல்களை ஏற்பாடு செய்து அவர்கள் வீட்டிற்கு மின்வசதி செய்து கொடுத்துள்ளார். இவரின் செயலுக்கு நெட்டிசன்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நீங்கள்தான் ஆசிரியர்.. பள்ளிக்கூடம் தாண்டியும் மாணவர்களின் நலன் குறித்து நீங்கள் சிந்திப்பது நெகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.