திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே.. பயணிகள் கடும் அதிருப்தி
திருவாரூர்: திருவாரூர்-காரைக்குடி இடையில் சமீபத்தில் துவக்கப்பட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாரத்தில் 6 நாட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த ரயில் சேவையானது, திருவாரூர் மற்றும் காரைக்குடியில் இருந்து இனி வாரத்தில் தலா 3 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக, காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருவாரூர் - காரைக்குடி இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் இம்மார்க ரயில் சேவையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது முடிந்து விடும் என்ற கூறப்பட்ட அகல ரயில் பாதையாக்கும் பணி நத்தை வேகத்தில் நடைபெற்றது.
எம்பி சீட் தரல.. ராஜ்ய சபா சீட் சந்தேகம்.. சோகத்துடன் அதிமுக கூட்டத்துக்கு வந்த மைத்ரேயன்!
ஒருவழியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் 1ம் தேதி முதல், திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் சேவை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ரயில் சேவையை பெரிதும் எதிர்பார்த்திருந்து காத்திருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அறிவிக்கப்பட்டபடி கடந்த 1ம் தேதி மேற்கண்ட ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் பயணிகளின் பொறுமையை ரொம்பவே சோதித்தது ரயில்வே நிர்வாகம். சேவை துவக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சுமார் ஐந்தரை மணி நேரத்திற்குள் முடிய வேண்டிய பயணமானது, 10 மணி நேரத்தை தாண்டி சென்றது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
பயணம் நேர தாமததத்திற்கு காரணம் அவசர கதியில் எல்லா ஏற்பாடுகளையும் செய்த ரயில்வே நிர்வாகம், திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவையை வழங்கும் வழித்தடத்தில் உரிய கேட் கீப்பர் பணியாளர்களை நியமிக்காமல் அலட்சியமாக விட்டு விட்டது.
ரயிலில் முன் பக்கம் மற்றும் பின் பக்கம் தலா ஒரு ஊழியர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட ரயிலானது கேட்டுகளை கடக்கும் போது, கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் ரயிலில் முன்பக்கம் உள்ள ஊழியர் ட்ரெயினிலிருந்து இறங்கி கேட்டை திறப்பதும், பின்னால் உள்ள ஊழியர் கேட்டை மூடுவதுமாக உள்ளனர்.
இதனால் பயண நேரம் இருமடங்கானது. இந்த ரயில்சேவையை பெரிதும் எதிர்பார்த்திருந்த மக்கள் ஒருகட்டத்தில், இப்படி ஒரு ரயில் சேவையே தங்களுக்கு தேவையில்லை என்று புலம்ப தொடங்கி விட்டனர்.
இந்த ரயில் சேவையை அறிவித்தப்படி இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், திருவாரூர்-காரைக்குடி ,இடையிலான ரயில் சேவையில் மாற்றம் செய்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளிளிட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மற்றும் காரைக்குடியில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். மேலும் பயண நேரம் 8 மணி நேரமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
திருவாரூரில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காரைக்குடிக்கு மாலை 4.15 மணிக்கு சென்றடையும். காரைக்குடியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, திருவாரூருக்கு மாலை 5.45 மணிக்கு சென்றடையும். வரு ஆகஸ்ட் 30 வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது