பயிர் காப்பீடு தருவதில் அதிகாரிகள் குளறுபடி... விளக்கம் கேட்ட டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ
சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் விவசாயிகளுக்கு தர வேண்டிய பயிர் காப்பீட்டு தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பயிர்காப்பீடு வழங்கும் விவகாரத்தில் இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து குளறுபடி செய்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருவாரூர், மன்னார்குடி தொகுதிகளுக்குட்பட்ட பல ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீடு தொகை தரப்படவில்லை என்றும், இது குறித்து கேட்டால் அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து காப்பீடுத் தொகையை பெற்றுத்தர, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் வடுவூரைச் சேர்ந்த கதிரவன். இந்நிலையில் பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகள் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ.விடமும் முறையிட்டுள்ளனர். அவரும் மாவட்ட அளவில் உள்ள இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் முதற்கட்டமாக பேசிப்பார்த்துள்ளார். ஆனால் உரிய பதில் வரவில்லை.
இதையடுத்து விவசாய பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு சென்னையில் இயங்கி வரும் ''அக்ரிகல்ச்சர் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின்'' மண்டல அலுவலகத்திற்கு சென்ற டி.ஆர்.பி. ராஜா, பயிர் காப்பீடு தொகையை தருவதில் ஏன் மெத்தனம் என்பன உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியோ இல்லை, இதற்கு கொடுக்க முடியாது, அதற்கு கொடுக்க முடியாது என சாக்குபோக்குகளை சொல்லியுள்ளார்.
பயிர்காப்பீடு வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக சில புள்ளிவிவரங்களையும், அரசாணைகளையும் டி.ஆர்.பி.ராஜா சுட்டிக்காட்டி பேசியதை அடுத்து, கவனத்தில் எடுத்துக்கொள்வதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த அதிகாரி உறுதியளித்துள்ளார்.