ஜுன் 1 முதல் திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவை.. இப்படி ஒரு ரயில்சேவையா.. சோகத்தில் மக்கள்
திருவாரூர்: திருவாரூர் - காரைக்குடி ரயில் இடையே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாளை மறுநாள் ரயில் சேவை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் சந்தோஷப்பட வேண்டிய மக்கள் துக்கத்தில் இருக்கிறார்கள்.அதுவும் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாக மாறிவிடுமோ என்ற மனநிலையில் திருவாரூர் கரைக்குடி மக்கள் இருக்கிறார்கள். அப்படி என்ன பிரச்னை என்பதை இப்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் மீட்டர்கேஜ் பாதைகளாக இருந்தவை அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2009ம் ஆண்டில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ஆனால் அகல ரயில் பாதைக்கான பணிகள் துவங்கின. ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த வணிகர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இதையடுத்து பணிகள் கொஞ்சம் வேகம் பெற்றன. இதையடுத்து ஒருவழியாக 10 ஆண்டுகள் கழித்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டம்
கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி திருவாரூர் - காரைக்குடி இடையே சோதனை ரயில் ஓட்டம் நடந்தது அதன் பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அறிவித்தபடி தெற்கு ரயில்வே ரயில்வே இயக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி இந்த ரயில் சேவை துவங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தெற்கு ரயில்வே
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்பட பலரும் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில்சேவை துவக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் வழித்தடம்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூரிலிருந்து காலை 8.15 மணியளவில் புறப்படும் ரயில் தொடர்ந்து மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மதியம் 2.15 மணியளவில் காரைக்குடியை சென்றடையும். பின்னர் மீண்டும் 2.30 மணி அளவில் அங்கிருந்து புறப்படும் இந்த ரயிலானது அதே வழித்தடத்தில் இரவு 8.30 மணியளவில் மீண்டும் திருவாரூர் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 கேட் கீப்பர்கள்
இதன்படி பார்த்தால் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான 110 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு இந்த பயணிகள் ரயில் 6 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளப்போகிறது. இதில் பயணம் செய்யப்போகும் பயணிகள் அழுவதா சிரிப்பதா என்ற நிலையில் உள்ளார்கள். மணிக்கு 20 கிலோமீட்டருக்கு குறைவாகவே இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இதற்கு காரணம் அங்குள் 72 கேட்டுகளுக்கும் ரயில்வே கேட் கீப்பர்கள் இல்லை என்பது தான். இதனால் இந்த ரயிலிலானது மொபைல் கேட் கீப்பர்களை கொண்டு இயக்கப்பட உள்ளது. அதன்படி இதே ரயிலில் இன்ஜினுக்கு அடுத்த படியாக இருக்கும் முதல் பெட்டியில் ஒரு கேட் கீப்பரும், கடைசிப் பெட்டியில் ஒரு கேட்கீப்பரும் பணியில் ஈடுபட உள்ளார்கள்.
கேட் கீப்பர் வேலை
அதன்படி வழியில் ரயில்வே கேட் முன்னதாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு முதல் பெட்டியில் உள்ள கேட் கீப்பர் கேட்டை மூடி விட்டு அதே பெட்டியில் ஏறிவிடுவார். பின்னர் அந்த கேட்டை ரயில் கடந்த பின்னர் நிறுத்தபட்டு கடைசி பெட்டியில் இருக்கும் கேட் கீப்பர் கேட்டை திறந்து விட்டு மீண்டும் அதே ரயிலில் ஏறிக்கொள்வாராம். இதேபோல் ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ரயில் நிறுத்தப்பட்டு கேட் மூடப்படுவதும் பின்னர் திறக்கப்படுவதும் காரணமாக 110 கிலோ மீட்டர் தூரத்தினை 6 மணி நேரம் வரையில் கடக்க வேண்டிய நிலை ஏற்பட போகிறது.
லாபம் எப்படி வரும்
இதில் ஒரு கொடுமை என்னவென்றால் 2 மணிநேரத்தில் செல்ல வேண்டிய ரயிலை 6மணி நேரம் இயக்க உள்ள ரயில்வே நிர்வாகம், இந்த ரயிலை வரும் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முடிய 3 மாத காலத்திற்கு மட்டும் இந்த டெமு ரயில் இயக்குவார்களாம். இந்த 3 மாத காலத்தில் கிடைக்கும் வருவாயை வைத்து தான் ரயிலை இயக்குவதா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்களாம். இது என்னையா இப்படி கொடுமையாக இருக்கே என்கிறீர்களா... ஆம் ரயில்கள் இயக்கினாலும் திருவாரூர்- காரைக்குடி மக்களுக்கு எந்த பயனும் இல்லை. 6 மணிநேரத்துக்கு இயக்கினால் யாரும் ரயிலில் ஏறமாட்டார்கள். வருவாயும் கிடைக்காது. எனவே கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கதையாகத்தான் ஆகப்போகிறது திருவாரூர்- காரைக்குடி ரயில்.