ஏழ்மையில் தவிக்கும் பளுதூக்கும் வீரர்.. உதவிக்கரம் நீட்டிய டி.ஆர்.பாலு மகன்..!
திருவாரூர்: மன்னார்குடியை சேர்ந்த பளு தூக்கும் வீரர் கோவிந்தசாமி காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தேவையான உதவிகளை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.
கோவிந்தசாமி 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் தற்போது கட்டிட பணிகளுக்கு சித்தாளாக சென்று வருகிறார். ஏழ்மையான நிலையிலும் தான் ஒரு பளுதூக்கும் வீரராக வர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள கோவிந்தசாமி அதற்கான பயிற்சிகளிலும், முயற்சிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.
ஸ்வீடன், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தும் ஏழ்மை நிலை காரணமாக கோவிந்தசாமியில் அங்கு செல்லமுடியவில்லை. இந்நிலையில் கனடாவில் நடைபெறும் காமன்வெல்ட் போட்டியில் பங்கேற்க கோவிந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது பயண செலவுக்கு உதவுமாறு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருந்தார்.
இது தொடர்பான தகவல் அறிந்த மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, கோவிந்தசாமியை அழைத்து உதவித்தொகை தொடர்பாக ஏன் தன்னிடம் சொல்லவில்லை என கடிந்துகொண்டார். பின்னர் இரண்டரை லட்ச ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக உறுதியளித்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., அரசிடம் பேசி அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும் கோவிந்தசாமிக்கு நம்பிக்கை ஊட்டினார்.
இதனால் நெகிழ்ந்து போன கோவிந்தசாமியின் கிராமமக்கள், அவருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர்.