வயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்!
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வயல்வெளிகளில் விவசாய பணிகளை செய்துக் கொண்டிருந்த பெண்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் செல்பி எடுத்தார். இவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் கூடுகிறது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது இரு ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் அவர்களுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பற்றி கொள்ள அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக என போட்டி போட்டு கொண்டு செயல்படுகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது. அது போல் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை டெல்டா மாவட்டங்களில் செய்து வருகிறார்.
திருக்குவளை
இந்த பிரசாரத்தை தனது தாத்தாவின் சொந்த ஊரான திருக்குவளையில் தொடங்கினார். பின்னர் குத்தாலத்தில் பிரசாரம் செய்தார். இது போல் இரண்டு முறை உதயநிதி கைது செய்யப்பட்ட போதிலும் அவர் விடாது தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
திமுகவின் நோக்கம்
மீனவர்கள், விவசாயிகள் என நலிந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில் உதயநிதி திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு திமுகவின் நோக்கம், கொள்கை குறித்து பேசினார்.
வேளாண் பணி
பின்னர் அங்கிருந்தவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து கருப்பு சிவப்பு நிற தொப்பிகளை சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கி மகிழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர்
திருவாரூர்(மா) திருத்துறைப்பூண்டி தொகுதி எடையூரில் வயல்வெளியில் வேளாண் பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
உதயநிதி
அந்த சகோதர - சகோதரிகளுடன் விரும்பி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் உதயநிதி பதிவிட்டுள்ளார். இது போல் மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களின் மனங்களை உதயநிதி கொள்ளை கொள்கிறார். உதயநிதியிடம் தாய்மார்கள் ஸ்டாலினை கேட்டதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதியின் பிரசாரம் பெரும் பலனை கொடுத்ததாக திமுகவினர் கருதுகிறார்கள்.