வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக திணறல்?.. முடிவெடுக்க 2 நாளாகும்.. ஓ. பி.எஸ்.
Recommended Video
சென்னை: திருவாரூர் தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பெரும் சஸ்பென்ஸ் ஆக மாறியுள்ளது. வழக்கத்திற்கு விரோதமாக அதிமுக படு அமைதி காத்து வருகிறது. வேட்பாளர் நேர்காணலை இன்று நடத்தியும் கூட வேட்பாளரை அது தேர்வு செய்யவில்லை.
திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளராக ஷாகுல் அமீதை அறிவித்தது. அடுத்து தினகரன் தனது வேட்பாளராக எஸ். காமராஜை அறிவித்தார். நேற்று மாலையில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டார்.
ஆளுங்கட்சியான அதிமுக மட்டும்தான் இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடி நேர்காணலில் ஈடுபட்டது.
53 விண்ணப்பங்கள்
திருவாரூரில் போட்டியிட சீட் கேட்டு மொத்தம் 52 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு நேர்காணல் நடத்தியது.
மலர்விழி
இந்த நிலையில் திருவாரூர் வேட்பாளராக மலர்விழி கலியபெருமாள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஒரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் வெளியானது. இவர் தற்போது திருவாரூர் நகர அம்மா பேரவை செயலாளராக உள்ள கலியபெருமாளின் மனைவி ஆவார். இந்த சூழலில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
45 பேரிடம் நேர்காணல்
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை முடிவு செய்வதற்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடந்தது. இதில் மொத்தம் 52 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 45 பேர் கலந்து கொண்டனர். 7 பேர் வரவில்லை. இருப்பினும் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களை ஆதரிப்பதாக அவர்கள் கடிதம் கொடுத்திருந்தனர்.
2 நாளாகும்
நேர்காணல் முடிவடைந்துள்ளது. அடுத்து ஓரிரு நாட்களில் வேட்பாளரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்போம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், இடைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.
பயமா எங்களுக்கா.. முதல்வர் சிரிப்பு
தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேட்பாளரை அறிவிக்க தாமதமானால் உடனே பயப்படுவது என்பதா. இன்னும் நாட்கள் உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது. எதற்கு நாங்கள் அச்சப்பட வேண்டும்.
சரித்திரம் படைப்போம்
அதிமுக எந்த கட்டத்திலும் எதற்கும் அஞ்சாத இயக்கம். மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஏற்காடு இடைத் தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெற்றோம். அதன் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றோம் 37 தொகுதிகளைக் கைப்பற்றினோம். அதேபோல திருவாரூரிலும் வெற்றி பெறுவோம். தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சரித்திரம் படைப்போம் என்றார்.
ஏன் இந்த தாமதம்
முதல்வரும், துணை முதல்வரும் இவ்வாறு கூறினாலும் கூட அதிமுக தனது வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க இவ்வளவு காலதாமதம் செய்வது வழக்கத்திற்கு விரோதமானது. ஒன்று சரியான வேட்பாளர் கிடைக்காமல் இருக்கலாம் அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட தயங்கலாம் அல்லது தேர்தல் நடக்காது என்று எங்கிருந்தேனும் சூசகத் தகவல்கள் அவர்களுக்குப் போயிருக்கலாம் என்று பேசப்படுகிறது.