திருவாரூரை விடுங்க.. திமுக வேட்பாளர் யாரு.. அத்தனை கண்களும் ஸ்டாலின் மீது!
திருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதியா, செல்வியா என தெரியவில்லை.
Recommended Video
திருவாரூர்: இப்ப எல்லாருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் வேட்பாளராக யாரை அறிவிக்க போகிறார் என்பதுதான்!!
இதற்கு காரணம், மறைந்த கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதாலும், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதாலும்தான் இந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
அது மட்டும் இல்லை, கருணாநிதி வீட்டில் ஓய்வில் இருந்த சமயத்தில் குறிப்பாக, ஜெயலலிதா இறந்தவுடனேயே ஸ்டாலினிடம் அதிரடியை மக்கள் அதிகமாக எதிர்பார்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்போதைய சூழலில் ஆட்சியையே ஸ்டாலின் பிடித்திருக்கலாம் என்றும், அந்த வாய்ப்பை மெதுவான அணுகுமுறையினால் கைவிட்டு விட்டார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போதுதான் ஸ்டாலின் வேகம் சற்று கூடியுள்ளது.
திணறினார்கள்
திமுக தலைவராக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் திருவாரூர் இடைத்தேர்தலில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயமும் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் நீண்ட அரசியல் பாரம்பரியத்திற்கும், நெடிய ஆட்சிப் பயணத்திற்கும், ஆழ்ந்த ராஜதந்திரத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் எவ்வளவோ பேர் திணறினார்கள். அவரை போலவே அனைத்திலும் கோலோச்ச வேண்டிய நிர்ப்பந்தமும் தற்போது ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.
நெருக்கடி
அது மட்டும் இல்லை, இந்த தேர்தலின் வெற்றி பெற்றால் ஸ்டாலினின் மவுசு இன்னும் கூடிவிடும். ஒருவேளை தோல்வியை தழுவினால், அடுத்தடுத்து வரப்போகிற தேர்தல்கள், கூட்டணி பங்கீடு போன்றவற்றில் தேவையில்லாமல் சிக்கிக் கொண்டு நெருக்கடியில் போய் விழ வேண்டி வரும்.
3 ஆப்ஷன்கள்
அதனால் திருவாரூரில் திமுகவின் வெற்றி என்பதில்தான் அதன் எதிர்காலமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான ஒரு வேட்பாளரை அவ்வளவு சீக்கிரம் அறிவித்துவிட முடியாது. அதற்காக கட்சி சார்பாக 2, 3 நாளாகவே ஆலோசனைகள் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஆப்ஷனில் உள்ளது டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்களின் பெயர்கள் வெளிப்படையாக பேசப்பட்டு வந்தாலும், உள்ளுக்குள் வேற கணக்கு ஓடுவதாக கூறப்படுகிறது. ஸ்டாலின், உதயநிதி, செல்வி என்று குடும்ப கணக்கு ஒரு பக்கம் நடக்கிறது.
அனுதாப ஓட்டுகள்
ஏனென்றால், 234 தொகுதிகளில் இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் குடும்ப உறுப்பினர்களை களமிறக்க முடியும். கருணாநிதியின் சொந்த தொகுதி என்பது பலம் என்றாலும், அனுதாப வாக்குகளை இழக்க திமுக தலைமை விரும்பவில்லை. குடும்ப சார்பான ஆட்களை வேட்பாளராக இருந்தால் மட்டுமே இந்த அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்.
புது சிக்கல்
இன்னும் ஸ்டாலினே களமிறங்கினால் கூடுதல் பலம்தான். ஆனால் கொளத்தூரை விட்டு ஸ்டாலின் வருவாரா என்று தெரியாது. எவ்வளவு களேபரங்கள் கட்சியில் நடந்தாலும் கொளத்தூருக்கு ஓடிச்சென்று மக்களை சந்திப்பதை மட்டும் ஸ்டாலின் தவறுவதே கிடையாது. மேலும் திருவாரூரை வென்றால் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அது புதுச் சிக்கலுக்கு வழி வகுக்கும்.
உதயநிதி, செல்வி
உதயநிதி, ஸ்டாலின் இருவரையும் தாண்டி, செல்வியின் பெயர் அடிபடுகிறது. இதற்கு காரணம், செல்விக்கு திருவாரூர் மக்கள் அத்துபடி. எல்லோரிடமும் எளிதாக பழக கூடியவர். போன முறை கருணாநிதிக்காக வாக்கு சேகரிக்க செல்வி சென்றபோது, மக்கள் அவருக்கு தனிப்பட்ட முறையில் வரவேற்பு தந்ததற்கு காரணம், அவர் அனைவரிடமும் பழககூடிய எளிமையும், அன்பும்தான். அதுமட்டும் இல்லை, கருணாநிதியை கடைசிவரை ஆஸ்பத்திரியில் தங்கி கவனித்து கொண்டவர் செல்விதான் என்பது எல்லோருக்குமே தெரியும்.
வேட்பாளர் யார்?
மேலும் திருக்குவளை வீட்டை எப்பவுமே பராமரிக்கும் பொறுப்பு செல்வியிடம்தான் உண்டு என்பதால் இந்த தொகுதி செல்விக்கு ஒன்றும் புதிதல்ல. கட்சி ரீதியாக திமுக எப்படி கணக்கு போட்டாலும் குடும்ப உறுப்பினர்களை நிறுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று தொகுதி மக்களே ஒரு கணக்கு போடுகிறார்கள். பார்ப்போம்... திருவாரூர் ஸ்டாலினுக்கா, உதயநிதிக்கா, செல்விக்கா என்று???