கஜா புயல் மீட்பு பணிக்கு 'மண்ணின் மகன்' டிடிவி கொடுத்த 'நிதி உதவி'.. அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!
Recommended Video
மன்னார்குடி: டெல்டா மாவட்ட மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொள்ளும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிவாரண தொகை வழங்கி உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது கொடூர கஜா புயல். இதன் காரணமாக, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட டெல்டா மாவட்ட மக்கள் கடும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
அந்த மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதார மரங்களை இழந்துவிட்டு 20 வருடங்கள் பின்னோக்கி சென்றுவிட்டனர்.
கட்சிகள் உதவி
இதனிடையே, புயல் நிவாரண நிதியாக பல்வேறு அரசியல் கட்சிகளும், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றன. திமுக சார்பில் ஒரு கோடி ரூபாயை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.
பணம், பொருட்கள்
சிறுசிறு அரசியல் கட்சிகளும் கூட தங்களால் முடிந்த உதவிகளை களமிறங்கி செய்துவருகிறார்கள். பணம் கொடுக்க முடியாதவர்கள் உணவு பொருளாகவோ ஆடைகளை சேகரித்து கொடுக்கிறார்கள். நாட்டுப்புற கலைஞர்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்தி பணம் சேகரித்து கொடுக்கிறார்கள். சிறுவர், சிறுமிகள் கூட தங்களது உண்டியலில் சேகரித்த பணத்தை வழங்கி வருகிறார்கள். ஆனால், அந்த மண்ணின் மைந்தன் என்று கூறக்கூடிய டிடிவி தினகரன் இதுவரை நிதி உதவியை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவில்லை.
மண்ணின் மைந்தன்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தி தெரிவிக்கிறார்கள். எப்போதுமே இந்த மண்ணின் மைந்தன் என்று கூறிக்கொள்ளும் தினகரன், இதுவரை மக்களுக்காக பணத்தை செலவிடாதது ஏன்? நிதி உதவி வழங்காமல் இருப்பது ஏன் என்பது தெரியவில்லை என்கிறார்கள். கட்சி தாண்டியும் கூட தனிப்பட்ட முறையிலும் அவர் செல்வந்தர் தான். தனது சொந்த பணத்திலிருந்து கூட பல கோடி ரூபாயை வழங்கி மக்களுக்கு உதவிகள் செய்ய முடியும். ஆனால், வெறுமனே அரசை தாக்கி அறிக்கை வெளியிடுவதோடு, பணி முடிந்தது என்று தினகரன், நிறுத்திக் கொண்டார் என்று அந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.
நிதி உதவி
கட்சியின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்கு பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் தினகரன், புயல் நிவாரண பணிகளுக்கும் அள்ளி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பேரிடர் பாதித்துள்ள இந்த நிலையில் அரசியல் பாரபட்சங்களையும், மாச்சரியங்களையும் கடந்து மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு, தன்னால் இயன்ற உதவியை தினகரன் கட்சி செய்ய வேண்டும் என்று டெல்டா மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.