திருத்துறைப்பூண்டியில் சோகம்.. புயலுக்கு எல்லாவற்றையும் பறிகொடுத்த பெண் உடல் நலக்குறைவால் மரணம்
நிவாரண முகாமில் மற்றொரு பெண் உயிரிழந்தார்.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நிவாரண முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண் இன்று உயிரிழந்தார்.
இன்னும் கஜா புயலின் தாக்கம் மக்களை மீண்டு வராமல் செய்து வருகிறது. ஏற்கனவே வீடு, வாசல், உடைமைகள், தோப்பு, வயல்கள் என எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக மக்கள் நிற்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்து உயிரிழந்து வருவது மேலும் மேலும் புரட்டி போட்டு வருகிறது.
புயல் பாதித்த மக்களின் உயிரிழப்புகள் தினந்தோறும் தொடர்கிறது. தற்கொலை செய்தோ, நோய்வாய்ப்பட்டோ இறந்து கொண்டே போகிறார்கள்.
சாப்பாடு, குடிநீர்
எல்லாவற்றையும் இழந்த மக்கள் முகாம்களில்தான் இன்னமும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான சாப்பாடு, குடிநீர், மருந்து பொருட்கள் என எல்லா தரப்பிலும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
4 பெண்கள் பலி
இந்த சாப்பாட்டை வாங்கத்தான் 2 நாளுக்கு முன்புகூட 4 பெண்கள் சாலையோரம் காத்திருந்தார்கள். வண்டி வரும், வந்தால் ஏதாவது தருவார்கள், வாங்கி போய் சாப்பிடலாம் என்று நின்றிருந்தார்கள். அவர்கள் மீதுதான் ஒரு கார் வந்து மோதி பரிதாபமாக நால்வருமே இறந்துவிட்டார்கள்.
குளிரால் உயிரிழப்பு
இதைப்போலவே, கரூர் மாவட்டத்தில் பக்கிரியம்மாள் என்ற 65 வயது பெண்மணி, ஒரு அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களோடு தங்க வைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு குளிர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் முகாமிலேயே உயிரிழந்தார்.
நொறுங்கி போனார்
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார். இவரும் முகாமில்தான் தங்கி இருந்தார். இவர் பெயர் வேதநாயகி. இவருக்கு இருந்த சொந்த வீடு, நிலபுலன்கள் எல்லாமே நீரில் மூழ்கி சிதிலமாகி விட்டது. தன் வீடு, வாசல் போனதில் இருந்தே வேதநாயகி நொறுங்கி போய்விட்டார். எல்லாம் போச்சே என்றே புலம்பி கண்ணீர் விட்டு, கடைசியில் உடல்நலம் குன்றிவிட்டது.
ஜீரணிக்க முடியவில்லை
ஆனால் இன்றோ வேதநாயகி முகாமிலேயே இறந்துவிட்டார். இவருக்கு வயசு 37தான். புயல் பாதித்து இறந்தவர்களையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில், இப்படி முகாமில் தங்கியிருப்பவர்களும் தொடர்ந்து உயிரிழந்து வருவது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.