கணவர், மாமனார், மாமியார் அடி உதை.. வரதட்சணை கொடுமை.. தீக்குளித்து உயிர் துறந்த மைதிலி
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து உயிரிழந்தார்
திருவாரூர்: வரதட்சணை கொடுமையுடன் அடி, உதை, சித்ரவதையும் சேர்த்து அனுபவித்த மைதிலி, கடைசியில் தன் உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இப்போது சிகிச்சை பலனளிக்காமல் மைதிலி இறந்துவிட்டார்.
திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இரண்டரை வருஷத்துக்கு முன்பு மைதிலி என்பவருடன் கல்யாணம் ஆனது. ஒருசில மாசம்தான் இருவரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.. உடனே ஆரம்பமானது வரதட்சணை கொடுமை.
மைதிலியை தொடர்ந்து வரதட்சணை கேட்டு அருணும், மாமனார் இளங்கோவும் மாமியார் சுபாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர். போனவாரமும் இது சம்பந்தமான சண்டை வீட்டில் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமும், விரக்தியும் அடைந்த மைதிலி, கடந்த 26-ம் தேதி தன் உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். 80 சதவீதம் உடல் எரிந்த நிலையில், மைதிலிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி!
இதனிடையே போலீசாரிடம் மைதிலி சொல்லும்போது, வரதட்சணை கேட்டு கணவன், மாமனார் தன்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அதனால்தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் உடல் வெந்துபோன நிலையிலும் வாக்குமூலம் அளித்தார்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வைப்பூர் போலீசார், அருண் மற்றும் மாமனார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் நாகை ஜெயிலில் அடைத்தனர். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் மைதிலியை காப்பாற்ற முடியவில்லை. அதனால் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே மைதிலிக்கு உயிர் பிரிந்தது.