திருமலை ஏழுமலையானின் பல கோடி ஆபரணங்களும் - மண்சட்டி தயிர்சாத பிரசாதமும்
திருப்பதி: திருமலையில் ஏழுமலைகள் மீது எழுந்தருளியிருக்கும் சீனிவாசப்பெருமாள் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள தங்கநகைகளை அணிவிக்கிறார்கள் என்றாலும் அவருக்கு பிரசாதமாக தினம் தினம் புது மண்சட்டியில் செய்யப்பட்ட தயிர்சாதத்தைதான் படைக்கின்றனர். அதுவே அவருக்கு விரும்பமானதாக இருக்கிறது.
திருப்பதி மலையில் வாழும் சீனிவாச பெருமாளை அனைவரும் ஏழுமலையான் என்று அழைக்கிறார்கள். ஸ்ரீனிவாசன், கோவிந்தன், வெங்கடாசலபதி என்று பல பெயர்கள் கொண்ட திருமலை நாதனுக்கு ஏழுமலையான் என்று பெயர் வர காரணம் தெரியுமா? ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஏழு மலைகள் உள்ளது. ஒவ்வொரு மலையின் பெயரிலும் ஒரு அர்த்தம் உள்ளது. ஏழு மலைகளை கொண்டுள்ளதால் ஏழுமலையான் என்று அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அந்த ஏழு மலைகளைப் பற்றியும் ஏழுமலையானுக்கு அணிவிக்கும் ஆபரணங்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.
ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். ஏழுமலையான் திருமேனியில் உளி பட்ட இடமே தெரியாது.
ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
வேங்கடமலை சேஷமலை
‘வேம்" என்றால் பாவம், ‘கட" என்றால் ‘நாசமடைதல்". பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இந்த மலைக்கு ‘வேங்கட மலை" என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார். பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். அவதாரத்திற்காக வந்த ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை" என்று அழைக்கப்படுகிறது.
வேதமலை கருடமலை
வேதங்கள் அனைத்தும் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை" என்று அழைக்கப்படுகிறது.
சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இந்த மலை ‘கருட மலை" எனப் பெயர் பெற்றது.
விருஷபமலை அஞ்சனமலை
விருஷபன் என்ற அசுரன், சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றதால் இம்மலைக்கு ‘விருஷப மலை" எனப் பெயர் வந்தது.
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை" எனப்படுகிறது.
ஆனந்தமலை
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்குமிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும், ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இந்த மலைக்கு ‘ஆனந்த மலை" என்று பெயர் வந்தது. இந்த ஏழுமலைகளின் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதிக்கு ஏழுமலையான் என்று பெயர் வந்தது.
நகைகளின் மதிப்பு
ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். 11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.
ஏழுமலையான் ஆபரணங்கள்
தலைக்கு கிரீடம், சங்கு சக்ரம், தங்க பத்ம பீடம், தங்கத்திலான திருப்பாதங்கள், சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம், பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம், காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு, நாகா வேஸ்பண உதரபந்தம் - மத்தியாபரணம், சிறுகண்டல தசாவதார ரசனா - தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு, சிறிய கழுத்து மாலை, பெரிய கழுத்து மாலை - எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை, தங்க புலி நக மாலை - திருமார்பில் அணியப்படும், ஐந்து வரிசை கோபு ஹாரம் - தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும். தங்க யக்னோ பவீதம்- பூ நூல் - ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல், சாதாரண பூணூல், துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை, சதுர்புஜ லட்சுமி மாலை, 108 அஷ்டோத்தர சத நாம மாலை, சஹஸ்ர நாம மாலை - 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை,சூர்ய கடாரி - தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம், வைகுண்ட ஹஸ்தம்- வலது கை, கடி ஹஸ்தம் - இடது கை, கடியாலம்- கங்கணம், நாகாபரணம், பூஜ கீர்த்திகள், கர்ணபத்திரம்,
தயிர்சாதம் பிரசாதம்
ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.