ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை பிளேடால் வெட்டிய தமிழக இளைஞர்கள்
திருப்பதி: ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை பிளேடால் வெட்டிய அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது.
திருப்பதி அடுத்த ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியில் இருப்பவர் உமாமகேஸ்வரன். இவர் நேற்று பணி நிமித்தமாக ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, ரயில் நிலைய மேம்பாலம் அருகே மது அருந்திய நிலையில் அரக்கோணத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் விஜயன் ஆகியோர் சாலையில் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக சென்ற டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரனை, இருவரும் பிளேடால் அறுத்து காயப்படுத்தினர். கையில் பலத்த காயம் அடைந்த உமாமகேஸ்வரனை அங்கிருந்த மீட்ட ரயில்வே போலீசார் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
உமாமகேஸ்வரனை பிளேடால் அறுத்து காயப்படுத்திய வெங்கடேஷ் ,விஜயன் ஆகியோரை ரேனிகுண்டா ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.