திருப்பதியில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்... கோடை விடுமுறையில் இதுவரை இல்லாத அளவிற்கு கூட்டம்
திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 25 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாட்டின் பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கு, தங்களது தலை முடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர் பக்தர்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருவாயை ஆண்டுக்கு நூறு கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோடைக்கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 18 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். அந்த அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாளை திருப்பதி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இந்த நிலையில், கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு 25 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் அனைத்து இலாகா அதிகாரிகள், துப்பரவு பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு பக்தர்களுக்கு சேவை புரிந்தது பாராட்டுக்குரியது என்று தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நாளை முதல் 13-ந்தேதி வரை சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அஷ்டபந்தன பாலாலயா மகா சம்பிரோக்ஷனம் நடக்கிறது. திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு சப்தகிரி மாதா புத்தகம் சந்தா முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சம் பக்தர்களுக்கு சப்தகிரி மாதா சந்தா முறையில் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் அருகே உள்ள ஆசான மண்டபத்தில் 600 பேர் அமரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தெப்பத்திருவிழா 13-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடக்கிறது. அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 13-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.