கேன்சர் நோயாளிக்கு உதவிய ஜெகன்மோகன் ரெட்டி.. சாலையில் நின்றவாறு அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு
அமராவதி: கேன்சர் நோயாளிக்கு உதவுவதற்காக தனது வாகனத்தை நிறுத்திய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ரூ. 20 லட்சத்துக்கான மருத்துவ உதவியை செய்வதாக உறுதியளித்தார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் 155 இடங்களில் வெற்றி பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றார். இந்த நிலையில் அவர் விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடத்துக்கு சென்றுவிட்டு விமான நிலையத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சில இளைஞர்கள் கையில் பதாகைகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அந்த இளைஞர்களிடம் சென்று விவரத்தை கேட்டறிந்தார்.
அப்போது அவர்களது நண்பர் 15 வயது சிறுவன் லுக்கிமியா எனப்படும் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாக கூறினர். அந்த சிறுவன் ஹைதராபாத்தில் உள்ள இந்தோ அமெரிக்கன் கேன்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரஜின் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ரூ .25 லட்சம் பணம் கட்ட அறிவுறுத்தியிருந்தது. ஆனால் நீரஜின் தந்தை அப்பலா நாயுடுவும் தாய் தேவியும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் அவர்களால் வெறும் 40 ஆயிரம் மட்டுமே திரட்ட முடிந்தது.
நீரஜ்ஜின் மருத்துவ செலவுக்கு உதவும்படி அவரது நண்பர்களும் பெற்றோரும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தனர். நீரஜின் சிகிச்சைக்காக மாநில அரசு ரூ. 20 லட்சத்தை அளிக்கும் என்று உறுதியளித்த ஜெகன்மோகன் ரெட்டி அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யுமாறும் தேவையான பணத்தை தயார் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.