மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்.. திருப்பதி தேவஸ்தானத்திடம் ரூ.16 கோடி கேட்கும் ஆந்திர அரசு
கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆந்திர மாநில அரசு நிதியுதவி கோரியுள்ளது.
திருப்பதி: மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க 16 கோடி ரூபாய் தேவைப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்திடம் ஆந்திர மாநில அரசு நிதியுதவி கேட்டுள்ளது. பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம், லட்டு உள்ளிட்டவைககளை வழங்கி வருவது போல அன்னதான பிரசாத திட்டத்தில் 16 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆந்திரா அரசு கேட்டுள்ளது.
இந்தியாவின் பணக்கார கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில். தினசரி உண்டியல் வருமானமே ரூ.4 கோடி கிடைக்கும். அறை தங்கும் வாடகை, முடி காணிக்கை மூலமும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு, அன்னதானம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோடிகளில் வருமானம் கிடைக்கும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் ரூ.16 கோடி கேட்டுள்ளது ஆந்திரா அரசு.
அண்ணல் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு திருமா நன்றி.. நெகிழ்ச்சி பதிவு..!
இலவச பாட புத்தகங்கள்
ஆந்திராவில் உள்ள கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக பாட புத்தகங்கள் வழங்க ரூ.16 கோடி தேவைப்படுகிறது.
நிதி நெருக்கடி
நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு இலவச புத்தகம் வழங்க முடியவில்லை என ஆந்திர மாநில உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு கல்லூரி முடித்துச்சென்ற மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்ட பழைய பாடப்புத்தகங்களை வாங்கி இந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம்
மொத்தம் ஆந்திராவில் உள்ள 452 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க ரூ.16 கோடி தேவைப்படுகிறது. இதற்காக ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
அன்னபிரசாத திட்டம்
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் லட்டு உள்ளிட்டவைகள் வழங்கி வருவது போல அன்னபிரசாத திட்டத்தில் ரூ.16 கோடியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அடுத்த தேவஸ்தான கூட்டத்தில் புத்தகங்கள் வழங்குவது குறித்து உறுப்பினர்களிடம் ஆலோசிக்கப்பட்டு நிதி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.