3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம்... யாரையும் கேட்க அவசியமில்லை - ஆந்திர அமைச்சர்
திருப்பதி: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம் என்றும், இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை எனவும் அம்மாநில அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் சமவளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி இதனைக் கூறினார்.
எதிர்ப்பு
ஆந்திராவில் 3 தலைநகரங்களை அமைக்க அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்னூலை நீதிமன்ற தலைநகரமாக மாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா... ஊருக்கே வர்றாங்க.. உடனே சேர்க்க இதை செய்யுங்க!
3 அல்ல 30 தலைநகரம்
இந்நிலையில் ஆந்திர மாநில பஞ்சாயத்து ராஜ்துறை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 3 அல்ல 30 தலைநகரங்கள் கூட அமைப்போம், இதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
விளக்கம்
மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்பட்டதையும், கர்நாடகாவில் பெல்காம் இரண்டாவது தலைநகரமாக உள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர் மாநில வளர்ச்சிக்காக அந்தந்த மாநில அரசுகள் எடுத்த முடிவு இது என விளக்கம் அளித்தார்.
அமைச்சர் பேட்டி
ஆந்திர மாநில அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியின் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசை தாங்கள் பொருட்படுத்தவில்லை என்கிற பொருள்படும் வகையில் அவர் பேட்டியளித்திருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.