ஏழுமலையான் கோயிலில் மயங்கி விழுந்த பெண்.. 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்த போலீஸ்காரர்.. நெகிழ்ச்சி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்து சென்ற போது மயங்கி விழுந்த பெண்ணை 4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதே பிரம்மோற்சவம் ,வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.
இவ்வாறு வரும் பக்தர்கள் நேரடியாக பேருந்து மூலம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு வருவர். இன்னும் சிலர் நடைபாதை வழியாக வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அலிபிரி நடைபாதை வழியாகவே வருவர்.
அலிபிரி
இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநில ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ அமர்நாத் ரெட்டி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு நடந்து வந்தனர். அவர்கள் அலிபிரி வழியாக மலையேற தொடங்கினர்.
பெண்ணுக்கு உதவி
அப்போது வனப்பகுதியில் புஜ்ஜி என்ற பெண் மயங்கி விழுந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவர் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். அப்போது அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் ஏதும் இல்லை. இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாரில் குள்ளய்யா என்பவர் அந்த பெண்ணுக்கு உதவ நினைத்தார்.
அஸ்வினி மருத்துவமனை
இதையடுத்து அந்த பெண்ணை தனது தோளில் சுமந்த போலீஸ்காரர் அந் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.4 கி.மீ. தூரம் தோளில் சுமந்து கொண்டு திருமலையை சென்றடைந்தார். அங்கு அந்த பெண் அஸ்வினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வேகமாக பரவிய புகைப்படம்
போலீஸ்காரர் குள்ளய்யா அந்த பெண்ணை தோளில் சுமந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன. குள்ளய்யாவை எஸ்பி அன்புராஜன் அழைத்து பாராட்டியதோடு அனைத்து காவலர்களும் குள்ளய்யாவை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.