முதலில் ஜெருசலேம்.. அடுத்து அமெரிக்கா... முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதற்காக போகிறார் தெரியுமா?
அமராவதி: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன்ரெட்டி, தனது சொந்த செலவில் 4 நாள் பயணமாக ஜெருசலேம் செல்ல உள்ளார்.
ஆந்திரா மாநில முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து, ஜெகன்மோகன் பல்வேறு அதிரடிகளை காட்டி வருகிறார். அந்த வகையில், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது சொந்த செலவில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகருக்கு அடுத்த மாதம் செல்கிறார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். ஒவ்வொரு ஆண்டும் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். தற்போது ஜெகன்மோகன் ரெட்டியும் தனது தந்தையின் பாணியை கடைபிடிக்கிறார்.
தேர்தலில் அபார வெற்றியை பெற்ற ஜெகன்மோகன்ரெட்டி வருகிற 1-ந் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்தில் இருந்து ஜெருசலேம் புறப்பட்டு செல்கிறார். ஏசு பிறந்த இடமான பெத்தலகேமுக்கு செல்லும் அவர், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக காணிக்கை செலுத்துகிறார். பின்னர் 5-ந்தேதி, ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா திரும்புகிறார்.
அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி 15-ந்தேதி குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவரது இளைய மகள் வர்ஷாவை உயர் கல்வி படிப்பில் சேர்ப்பதற்காக செல்ல உள்ளார்.
மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடனாக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 24- ந்தேதி அமெரிக்க பயணத்தை முடிந்து கொண்டு நாடு திரும்புகிறார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.