நாளை ஆந்திரா சட்டசபை தேர்தல்.. ஹைதராபாத் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டமோ, கூட்டம்
திருப்பதி: ஆந்திராவில் நாளை சட்டசபை மற்றும் லோக்சபா வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. இதையடுத்து, ஹைதராபாத்தில் பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை நடைபெற இருக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் ஆந்திராவில் உள்ள அனைத்து 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல, 175 சட்டசபை தொகுதிக்கும் நாளை, வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாளை காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில் வாக்குப் பதிவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டின் பேரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அடையாள மை, வாக்காளர் பட்டியல் ஆகியவை உள்ளிட்ட தேவையான அனைத்து பொருட்களும் வாக்குப் பதிவு மையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர் குத்திக் கொலை.. கத்தியுடன் சிக்கிய கொலையாளி
தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக ஆந்திரா முழுவதும் வாக்குசாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆந்திராவை சேர்ந்த பலர் ஹைதராபாத்தில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களில் பணியில் இருப்பதால் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக நேற்று மாலை முதல் சொந்த ஊர் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஹைதராபாத்தில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் குவிந்தனர். இதனால் ரயில்களில் இடம் கிடைக்காமல் நிலை ஏற்பட்டது. மேலும் பேருந்துகளிலும் இடமில்லாத காரணத்தால் தனியார் சொகுசுப் பேருந்து நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்து பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.