திருப்பதி அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டி- தமிழக தேவஸ்தான கோவில்களுக்கும் தலைவர்!
திருப்பதி: திருப்பதி திருமலை அறங்காவலர் குழுவில் தமிழக அரசின் ஒப்பந்ததாரராக இருந்த சேகர் ரெட்டி மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
திருப்பதி அறங்காவலர் குழுவில் ஏற்கனவே சேகர் ரெட்டி இடம்பெற்றிருந்தார். ஆனால் 2016-ல் வருமான வரி சோதனையில் சிக்கினார் சேகர் ரெட்டி.
இதையடுத்து அறங்காவலர் குழுவில் இருந்து சேகர் ரெட்டி நீக்கப்பட்டார். இதன் பின்னர் திருப்பதி கோவிலுக்கும் தேவஸ்தானத்துக்குட்பட்ட பிற கோவில்களுக்கும் ஏராளமான நன்கொடைகளை சேகர் ரெட்டி வழங்கினார்.
இந்நிலையில் புதிய அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதுடன் சிறப்பு அழைப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சேகர் ரெட்டி பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பதி தேவஸ்தான குழுக்களின் தலைவராகவும் சேகர் ரெட்டி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சேகர் ரெட்டி?
ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் தமிழகமே பெரும் பரபரப்புக்குள்ளானது வருமான வரி சோதனைகளால். அப்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி கிராமத்தில் மிகவும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர் சேகர் ரெட்டி. சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தினக்கூலியாக வாழ்க்கையை தொடங்கி ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்தவர். அப்படியே ரயில்வே யூனியன் தேர்தலிலும் அணிகளுக்கு ஆட்களைத் திரட்டிக் கொடுத்து ரயில்வே ஒப்பந்தங்களைப் பெறத் தொடங்க்கினார்.
இதுதான் சேகர் ரெட்டியின் பூர்வோத்திரம். இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதிக்கான ஒப்பந்தம் கிடைத்தது. 1994-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினரான சேகர் ரெட்டிக்கு அதிமுகவின் 2001-2006 ஆம் ஆண்டு ஆட்சிக்காலம் பெரும் திருப்புமுனை. ஏற்கனவே திருப்பதி தேவஸ்தான போர்டுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக போயஸ் கார்டன் வாசலும் சேகர் ரெட்டிக்கு திறந்தது.
மெல்ல மெல்ல சேகர் ரெட்டி விஸ்வரூபம் எடுக்க அமைச்சர்களும் அவரிடம் சரணாகதி அடைந்தனர். அப்படியே அரசின் ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்குதான் என்கிற எழுதப்படாத அத்தியாயமும் அரங்கேறியது. கனிமவளங்கள், மணல்குவாரி ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து சேகர் ரெட்டி வசமானது. இப்படித்தான் சேகர் ரெட்டி கிடுகிடு வளர்ச்சி அடைந்தார்.
தமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து
ஜெயலலிதா மறைந்த மறுநாளே வருமானவரித்துறை வளையத்தில் சிக்கினார் சேகர் ரெட்டி. அப்போது சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ10 கோடி மதிப்பிலான புதிய ரூ2,000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் 127 தங்கமும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. பின்னர் 2016 டிசம்பர் 21-ல் சேகர் ரெட்டி கைது செய்யப்பட திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு பதவியும் பறிக்கப்பட்டது. இப்போது மீண்டும் திருப்பதி அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக்கப்பட்டிருக்கிறார் சேகர் ரெட்டி.