தமிழக கோவில்களிலும் வருமானம் குறித்து கணக்கு ஆய்வு செய்யுங்க.. எச். ராஜா டிவீட்
திருப்பதி கோவில் கணக்குகள் மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேவஸ்தான வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகப் பிரபலம். பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளால் ஏராளமான சொத்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு சொந்தமான கணக்குகள் மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இதே போல தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோவில்களின் காணிக்கை மற்றும் சொத்துக்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர முன்னாள் முதல்வர் என் டி ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ட்வீட் செய்திருந்தார்.
திருப்பதி கோயிலுக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள் மற்றும் வரவு செலவு கணக்கு தொடர்பாக ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி கோயில் வரவு செலவு கணக்கு மற்றும் எதிர்கால கணக்குகளை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
ஏராளமான பக்தர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த கோரிக்கையை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்குகள் மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேவஸ்தான வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 முதல் 2020 வரையிலான கணக்குகளை சிறப்பு தணிக்கை செய்து 6 மாதங்களில் அறிக்கை வழங்கும்படி தலைமை கணக்கு தணிக்கையாளரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஏழுமலையானின் நன்கொடையாளர்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, திருப்பதி கோயில் சொத்துக்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தேன். இதற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார். தேவஸ்தானமும் அனுமதி வழங்கியுள்ளது. வேலை முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
சசிகலாவை சுற்றிச்சுழலும் நவகிரகங்கள்... இந்தாண்டு விடுதலையாக வாய்ப்பில்லை ராஜா
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் 5ஆண்டு காணிக்கை கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தேவஸ்தானம் ஒப்புதல். இதேபோல் தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோவில்களின் காணிக்கை மற்றும் சொத்துக்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் எச். ராஜா.