ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டம்- மாஜி அமைச்சர் சிந்தா மோகன்
திருப்பதி: ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மாஜி அமைச்சர் சிந்தா மோகன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு 37 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதேபோல் வேறு சில மாநிலங்களும் பிரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாகக் கூடும் என கூறப்பட்டு வருகிறது.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் திருப்பதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹைதராபாத்தை மத்திய அரசு தனி யூனியன் பிரதேசமாக்க திட்டமிட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
இத்தேர்தல் முடிவடைந்த பின்னர் ஹைதராபாத் யூனியன் பிரதேசமாக்கப்பட இருக்கிறது. இவ்வாறு சிந்தா மோகன் கூறினார்.