ஆந்திர தலைநகர் திட்டம் ...மக்கள் ஒத்துக்கிட்டா... அரசியலிலிருந்து போறேன்... சந்திரபாபு நாயுடு சவால்!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் அமராவதியை தலைநகர் ஆக்குவதை கைவிட்டு ஜெகன் மோகன் ரெட்டியின் மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள புதிய திட்டத்துக்கு 30,000 ஏக்கர் நிலம் பறிபோக வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள், பல்வேறு பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் அமராவதியை தலைநகராக கொண்டு வரும் திட்டத்தை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதனை கைவிட்டு 3 தலைநகர்கள் திட்டத்தை கையில் எடுத்தார். அதற்குத்தான் தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டியின் முதல்வர் பதவி தப்புமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அமராவதி
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க திட்டமிட்டார். இதற்காக அங்கு மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.
மாற்றினார்
ஆனால் கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்தவுடன் அமராவதி திட்டத்தை ரத்து செய்து புதிதாக 3 தலைநகர்களை அமைக்க திட்டமிட்டார். அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இந்த திட்டத்திற்காக ஜெகன் அரசு சட்டசபையில் புதிய சட்டம் நிறைவேற்றியது. ஆனால் சட்டமேலவையில் தெலுங்குதேசம் உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக உள்ளதால், அங்கு நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
போராட்டம்
மேலும் இந்த திட்டத்துக்கு விவசாயிகள் நிலம் பறிபோவதால் விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அமராவதியை தலைநகராக ஆக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜெகன் மோகன் அரசுக்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இந்த திட்டத்தை அறிவித்த முதல் ஆண்டான நேற்று விவசாயிகள் பேரணி நடத்தினர். அதில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-
பெண்களின் சாபம் பலிக்கும்
அமராவதி தலைநகர் திட்டத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதை மாற்றக் கூடாது. ஜெகன் அரசு கொண்டு வரும் 3 தலைநகர் திட்டத்தின் மீது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் அதை ஆதரித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.மக்கள் மிகவும் நம்பி ஜெகனை ஆட்சிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் மக்களுக்கு முற்றிலும் துரோகம் செய்து விட்டார். இது அவருக்கு கடைசி வாய்ப்பாகும். அவர் பெண்களின் சாபத்திலிருந்து தப்ப முடியாது. இவ்வாறு நாயுடு கூறினார்..