பிரதமர் மோடியுடன் இணக்கம் காட்டும் ஜெகன்.. ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி
அமராவதி: ஆந்திராவில் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சிபிஐ விசாரணை நடத்த ஆந்திராவில் அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தது.
டெல்லி காவல்துறை சட்டத்தின்படி, கடந்த 1946ம் ஆண்டு சிபிஐ அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டத்தின்படி டெல்லியில் மட்டும் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசு அனுமதி இல்லாமல் நேரடியாக விசாரணை நடத்தவோ, சோதனைகள் நடத்தவோ சிபிஐக்கு அதிகாரம் கிடையாது. எனவே மற்ற மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றால் அந்தந்த மாநிலங்கள் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணை
இதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கி உள்ளன. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படாததால் பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடுவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நாயுடு, ஆந்திராவில் சிபிஐ விசாரணை நடத்த அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் அதிரடி
இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. ஜெகன் முதல்வராக தேர்வாகி உள்ளார். சிபிஐ விசாரணை நடத்த சந்திரபாபு விதித்த தடைடைய ரத்து செய்து ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.
ஜெகன் அனுமதி
இதன்படி ஆந்திர மாநிலத்தில் சிபிஐ எங்குவேண்டும் என்றாலும் எந்த அனுமதி இன்றியும் விசாரணை மற்றும் சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளார். இதற்கான சட்ட திருத்தத்தை செய்யும்படி மாநில உள்துறை அமைச்சகத்துக்கு ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகன் திட்டம்
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலுக்கு முன்பு இருந்தே ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடியுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார். ஆந்திராவின் வளரச்சிக்கு சிறப்பு அந்தஸ்து ஒன்றுதான் தீர்வு என்பதில் உறுதியாக இருக்கும் ஜெகன் அதற்காக மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே செயல்படுகிறார். இதன் மூலம் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை அதிகம் பெற முடியும் என நம்புகிறார்.