திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்... ஏப்ரல் மாதத்தில் ரூ.84.27 கோடி உண்டியல் வருமானம்
திருமலை: திருப்பதியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் வருமானம் ரூ.84 கோடியே 27 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் கூறியதாவது: இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 லட்சத்து 96 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் வருமானம் ரூ.85 கோடியே 45 லட்சம் கிடைத்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உண்டியல் வருமானம் ரூ.84 கோடியே 27 லட்சம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 52 ஆயிரத்து 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லட்டு பிரசாதம் 88 லட்சத்து 5 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 95 லட்சத்து 15 ஆயிரம் லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், திருப்பதி கோதண்ட ராமசாமி கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் சூரிய நாராயணமூர்த்தி கோவில், ஒண்டிமிட்டா கோதண்ட ராமசாமி கோவில் ஆகியவற்றில் நடக்கும் ஆர்ஜித சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய, ஆகஸ்டு மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.