ஆக்சிஜன் பற்றாகுறையால் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு... திருப்பதியில் நிகழ்ந்த சோகம்..!
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
இதையடுத்து இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கர் லாரி 45 நிமிடம் தாமதமாக வந்ததால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே நிகழ்விடத்துக்கு சென்று ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன், மருத்துவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் 11 பேர் உயிரிழந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவுப்படி 11 பேர் உயிரிழப்பு குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாகுறையால் நாடு முழுவதும் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் தான் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 25 கொரோனா நோயாளிகள் இறந்தனர். இதேபோல் டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் கடந்த மாதம் 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர்.
ஆக்சிஜன் பற்றாகுறையை தீர்க்கும் பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தியில் இன்னும் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.