ஜூன் 8ம் தேதி முதல்.. திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை திறப்பு! உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் தரிசனம்
திருப்பதி: ஜூன் 8ம் தேதியான, வரும் திங்கள்கிழமை முதல் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் நடை மறுபடி திறக்கப்பட உள்ளது. கோவில் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மட்டும் முதலில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியதை தொடர்ந்து, கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல், திருமலை திருப்பதி, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மே 13ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், குறைந்த பக்தர்கள் என்ற அளவில் தரிசனத்திற்கு கோவில் நடையை திறப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில்தான், ஆந்திர அரசு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. தினமும் சுமார் 75,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த கோவில் இதுவாகும்.
இருப்பினும் முதல் கட்டமாக தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருப்பதி உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்குவது என்றும், படிப்படியாக பிற ஊர்கள் மற்றும் பிற மாநில மக்களுக்கும் அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும், திருப்பதி திருமலை தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Cyclone Nisarga: மும்பை அருகே இன்று மதியம் கரையை கடக்கிறது நிசர்கா புயல்.. ரெட் அலர்ட் பிறப்பிப்பு
தரிசனத்துக்கு வரக்கூடிய பக்தர்கள், முன்கூட்டியே தேவஸ்தான நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, ஒப்புகை சீட்டு பெற்று வர வேண்டும் என்றும், அலிபிரி செக் பாயிண்ட் பகுதியில் அந்த ஒப்புகை சீட்டு பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகுதான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.