சந்திரபாபு நாயுடு வாடகைக்கு வீடு தேடுகிறார்... சுழன்றடிக்கும் ஆந்திரா முதல்வர் ஜெகன்
Recommended Video
அமராவதி: ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகனின் அதிரடி நடவடிக்கைகளால், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.
ஆந்திர தலைநகர் அமராவதி அருகே உள்ள உண்டவல்லி என்ற பகுதியில் ஆந்திர அரசு வாடகைக்கு எடுத்து இருந்த வீட்டில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் உள்ளிட்டோரை சந்திப்பதற்கு வசதியாக 8 கோடி ரூபாய் செலவில் பிரஜா வேதிகா என்ற பெயரில் மாளிகை ஒன்றை ஆந்திர அரசு அமைத்திருந்தது.
பிரஜா வேதிகாவும், சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும், கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது. தற்போது அக்கட்சி ஆட்சியைப் பிடித்து, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகியுள்ள நிலையில், பிரஜா வேதிகா உள்பட, கிருஷ்ணா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் பிரஜா வேதிகா பங்களாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்ட ஜெகன் மோகன் ரெட்டி, சொகுசு பங்காளவை இடிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு, பிரஜா வேதிகா மாளிகை உட்பட வீடுகள் இடிக்கப்பட்டன. சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், அந்த வீடும் தப்பாது என்பதால், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சந்திர பாபு நாயுடுவின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு குறைத்தது.ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நர லோகேஷுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 4 பாதுகாவலர்கள் மட்டுமே தற்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடுவுன் மகனை தவிர அவரது குடும்பத்தில் உள்ள பிறருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா முதல்வரின் நடவடிக்கைகளால், சந்திராபாபு நாயுடுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.