ஏழு மலை கடந்து ஒலிக்கும் மதநல்லிணக்கம்...திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறி வழங்கிய இஸ்லாமியர்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர்.
இஸ்லாமியர்களின் இந்த செயல் மத நல்லிணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பலரும் இதை பாராட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். தினமும் அங்கு லட்சக்கணக்கான மக்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அந்த கோவிலில் தினமும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமானோர் பணம், பொருளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
திருமலை தேவஸ்தானம் ஏழுமலையான் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறது. அந்த அறக்கட்டளைக்கு பல்வேறு தரப்பினர் காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
''பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி'' என்று இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். திருப்பதி கோவிலுக்கு இஸ்லாமியர்கள் நன்கொடை வழங்கி இருப்பது மத நல்லிணத்துக்கு சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. ஏழு மலையை தாண்டி மத நல்லிணக்கம் ஒலித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் இதற்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.