அரசுக்கு ஆலோசனைக் கூற நிபுணர்கள் குழு... ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
அமராவதி: ஆந்திர மாநில அரசுக்கு ஆலோசனைக் கூறுவதற்காக 15 பேர்கள் அடங்கிய நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
அரசின் அனைத்து துறைகள் தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணித்து உரிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அந்தக் குழு வழங்கவுள்ளது.
இதனால் துறை செயலாளர்கள் சற்று பீதியடைந்துள்ளதோடு எதற்கு இந்த புதிய நடவடிக்கை என தங்களுக்குள் வினவிக்கொள்கின்றனர்.
அதிரடி
ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஊடகங்களின் வெளிச்சத்தில் இருந்துகொண்டே இருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 5 மாதங்களில் அவர் கொண்டு வந்த புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளது.
ஆலோசனை தர
ஆந்திர அரசுக்கு ஆலோசனைக்கூறவும், அனைத்து துறைகளை கண்காணித்து புதிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்க 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இது ஆந்திராவில் இதுவரை இல்லாத புதிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரசு கார்
அவ்வாறு நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழுவை சேர்ந்தவர்களுக்கு அரசு வாகனம் மற்றும் ஏராளமான சலுகைகளை அளித்துள்ளார் ஜெகன். மேலும், அவர்களுக்கு உதவியாக அரசு ஊழியர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட நிபுணர் குழுவில் உள்ள 15 நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.4 லட்சம் எனக் கூறப்படுகிறது.
முனுமுனுப்பு
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த நடவடிக்கைக்கு அரசு உயர் அதிகாரிகள் தரப்பிலும், துறை சார்ந்த செயலாளர்கள் மத்தியிலும் முனுமுனுப்பு கிளம்பியுள்ளது. எதற்கு இந்த சூப்பர் செயலாளர்கள் என மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தங்களுக்குள் வினவிக்கொண்டு ஆதங்கப்படுகின்றனர்.
புகார்
ஜெகன் மோகன் ரெட்டி நியமித்துள்ள 15 பேர் கொண்ட நிபுணர் குழுவில் 5-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்களுக்கு மக்களின் அன்றாடத் தேவைகளும், அவர்கள் எதிர்க்கும் திட்டங்களும் என்னவென்று தெரியும் என்பதால் இந்த புதிய முயற்சியாம்.