ஜெகன் ஆந்திர முதல்வராவது உறுதி.. மீண்டும் எம்எல்ஏ-வாகி அவர் கரத்தை வலுவாக்குவேன்.. நடிகை ரோஜா
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைப்பார் என நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாளை மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆந்திர சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன. ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும், ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேச கட்சித் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் பேராவலாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் விருப்பப்படி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி நிச்சயம்வெற்றி பெற்று முதல்வர் ஆவார் என உறுதிபட கூறினார்.
தங்களது எல்லா குறைகளையும் போக்கும் அளவிற்கு நல்லாட்சி தர முடியுமென்றால், அது ஜெகன்மோகன் ரெட்டியால் மட்டுமே முடியும் எனஆந்திர மாநில மக்கள் நம்புவதாக ரோஜா கூறியுள்ளார். நிச்சயமாக நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் முடிவில், ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்பது உறுதி செய்யப்படும். பின்னர் ஒரு நல்ல நாளன்று ஜெகன் முதல்வராவார்.
பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி மக்களுக்காக நல்லாட்சி வழங்கியும் அவர்களின் கஷ்டங்களை போக்கியும் தனது தந்தையை போலவே நல்ல பெயர் வாங்குவார் என்றார்.
மேலும் பேசிய ரோஜா தாம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவேன் என்றார்.தேர்தலில் வெற்றி பெற்று ஜெகனின் கரத்திற்கு வலு சேர்க்கப் போவதாக ரோஜா கூறியுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் வெற்றியை கொண்டாட பொதுமக்களும், கட்சியினரும் ஆவலாக இருப்பதாகவும்கூறியுள்ளார்