சூடுபட்ட "புலி".. இனி பாயுமா பாயாதா.. பவன் கல்யாண் ஆட்டம் முடிவுக்கு வந்தது
தேர்தல் தோல்வி காரணமாக பவன் கல்யாண் அரசியலை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம்
Recommended Video
விஜயவாடா: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக திட்டமிடப்பட்ட படம்தான் புலி. ஆனால் காலத்தின் கோலமாக அது கைவிடப்பட்டது. பின்னர் இதே பெயரில் தெலுங்கில் எஸ்ஜே சூர்யா படம் இயக்கினார் அதன் நாயகன்தான் பவன் கல்யாண். இப்போது ஆந்திர அரசியலில் சூடுபட்ட புலியாக காட்சி தருகிறார் பவன் கல்யாண்.
தமிழகத்தைப் போலத்தான் ஆந்திராவும். சினிமா கவர்ச்சி அதிகம். இதனால் இங்கு போலவே அங்கும் சினிமாவில் நடித்த கையோடு அரசியலுக்கு வருவோர், வரத் துடிப்போர், வந்து தோல்வி கண்டோர் அதிகம்.
தமிழகத்தில் எப்படி எம்ஜிஆரோ அதேபோல ஆந்திராவில் என்டிஆர். இந்த இரு பெரும் நடிக - தலைவர்களுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் எந்த ஒரு நடிகரும் இதுவரை ஆட்சிக் கட்டிலைப் பிடித்ததில்லை. தொடர்ந்து முயற்சித்தவாறே உள்ளனர். ஆனால் இதுவரை வெற்றி கிட்டியபாடில்லை.
இமாலய வெற்றி... தாயிடம் ஆசி வாங்க நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி!
கிருஷ்ணா
சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தார். கிருஷ்ணா வந்தார். இன்னும் பலரும் வந்தனர். ஆனால் வந்த வேகத்தில் வீழ்ந்தனர். அதில் லேட்டஸ்ட் வருகை பவன் கல்யாண். இவர் ஆந்திர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியவர். பரபரப்பை ஏற்படுத்தியவர். அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தனர். ஆனால் அவருக்கும் தோல்வியே கிடைத்துள்ளது.
ஜனசேனா
பவன் கல்யாண் ஆரம்பித்த கட்சியின் பெயர் ஜன சேனா என்பதாகும். இக்கட்சி காப்புசமூக வாக்குகளை பெரிதாக நம்பி களம் குதித்தது. இக்கட்சிக்கு எடுத்த எடுப்பிலேயே தெலுங்கு தேசம் கட்சியின் பி டீம் என்ற பெயர் கிடைத்து விட்டது. இதனால் இக்கட்சி மீது ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு சந்தேகம் போகவில்லை. அது ஒரு பின்னடைவாகவே போய் விட்டது.
ரஸோல் தொகுதி
பவன் கல்யாண் லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தார். லோக்சபா தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்டார். சட்டசபையில் 140 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் எங்குமே அவரது கட்சி வெல்லவில்லை. மாறாக, ரஸோல் என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இக்கட்சிக்கு வெற்றி கிடைத்தது.
2-வது இடம்
பவன் கல்யாண் பீமாவரம், கஜுவாகா என இரு சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோற்றார். அதிலும் கஜுவாகாவில் 3வது இடத்தையும், பீமாவரத்தில் 2வது இடத்தையும் அவர் பெற்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது கட்சியினர் அனைவருமே இதே கதியைத்தான் சந்தித்துள்ளனர்.
சந்திரபாபு நாயுடு
பவன் கல்யாண் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பெரும் தவறு செய்து விட்டார். அதாவது தெலுங்கு தேசம் அரசின் மீதான ஊழல் புகார்கள் குறித்து அவர் கண்டுக்கவே இல்லை. சந்திரபாபுநாயுடுவை அவர் விமர்சித்துப் பேசவே இல்லை. மாறாக சந்திரபாபு நாயுடுவின் ஊழல்களை கேள்வி கேட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மீதே விமர்சனத்தை வைத்தார். இதுதான் அவருக்கு எதிராக போய் விட்டது.
விலகல்
தற்போது பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள அவர் அரசியலை விட்டே விலகப் போவதாக கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தனது கட்சி நிர்வாகிகள், தோல்வியுற்ற வேட்பாளர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி வருகிறார். ஜூன் முதல் வாரத்தில் அவர் முக்கிய முடிவை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், அவர் கட்சியை விட்டு விட்டுப் போக மாட்டார். மாறாக கட்சியை பலப்படுத்த முயல்வார் என்றும் சொல்கிறார்கள்.
தலைகுனிவு
என்ன ஒரு காமெடியான விஷயம் என்றால் இக்கட்சியின் அரசியல் ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டவர் ராம் மோகன் ராவ். இவர்தாங்க தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர். இவரது அலுவலகத்தில்தான் சிபிஐ ரெய்டும் நடந்து தமிழகமே தலைகுனிந்தது என்பது நினைவிருக்கலாம்.