சமூக போராளி முகிலன் பிடிப்பட்டது எப்படி? திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேட்டி
திருப்பதி: திருப்பதி ரயில் நிலையத்தில் சமூக போராளி முகிலன் நேற்று பிடிப்பட்டார். இது தொடர்பான வீடியா நேற்று இரவு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பதி ரயில்வே காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்தையா முகிலன் பிடிப்பட்டது குறித்து செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில். "நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாடியுடன் காணப்படும் நபர் ஒருவர் குறித்து திருப்பதி ரயில்வே போலீசாருக்கு காலை மணி 10.40 க்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முகிலன் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு சென்ற ரயில்வே போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். போலீசாரை பார்த்ததும் ஆவேசம் அடைந்தவர் போல் காணப்பட்ட முகிலன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு எதிராகவும் தமிழில் கோஷம் எழுப்பியவாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
மனநிலை பாதிப்பு
அவரை தடுத்து நிறுத்தி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தோம். ஆனால் அவர் எங்களுக்கு ஆந்திர சகோதரர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோஷம் போட்டார். முகிலன் போட்ட கோஷத்தை புரிந்து கொள்ள முடியாத நாங்கள் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி ரயில்வே காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தோம்.
தமிழக சிபிசிஐடி போலீஸ்
நாங்கள் கொடுத்த மதிய உணவை சாப்பிட்ட அவர் என்னுடைய ஊர் காட்பாடி என்று கூறினார். எனவே அவரை காட்பாடிக்கு ரயிலில் அனுப்பி வைக்க முடிவு செய்தோம்.இந்த நிலையில் திருப்பதி ரயில்வே காவல் நிலையத்தில் முகிலன் இருப்பது பற்றிய தகவல் அறிந்த தமிழக சிபிசிஐடி போலீசார் எங்களை தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.
முகிலன் தேடப்படும் நபர்
சற்று நேர குழப்பத்திற்கு பின் தமிழக சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைத்த முகிலனின் புகைபடத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தோம்.
தமிழக போலீஸ் கோரிக்கை
இந்த நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முகிலனை ரயில்வே போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ரயிலில் காட்பாடிக்கு அனுப்பிவைத்தோம்.தமிழ் நாடு போலீசார் எங்களை தொடர்பு கொள்ளும் வரை அவரை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினார்.