நீட் ஆள்மாறாட்டம்.. மாணவன் உதித் சூர்யா குடும்பத்துடன் திருப்பதியில் கைது.. தேனியில் விசாரணை
Recommended Video
திருப்பதி: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்புடைய சென்னை மாணவர் உதித் சூர்யாவை தமிழக தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில் திருப்பதியில் அவரை குடும்பத்தினருடன் கைது செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் உதித் சூர்யா. இவர் கடந்த 2019-2020 ஆகிய கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் தேனி மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
சாத்தியம்
இதில் அந்த மாணவர் உதித் சூர்யா மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. ஒரு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டு கல்லூரியில் சேருவது என்பது சாதாரணா காரியமல்ல. இதனால் போலீஸார் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிச்சயம்
மேலும் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருந்தாலும் கலந்தாய்வின் போது நீட் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்துக்கும் உதித் சூர்யாவின் அடையாள சான்றிதழ்களில் உள்ள புகைப்படத்துக்கும் நிச்சயம் வித்தியாசம் தெரிந்திருக்கும். எனினும் அந்த மாணவர் தேனி கல்லூரியில் சேர்ந்து 2 மாதங்கள் படித்துள்ளார் என்றால் நிச்சயம் இந்த மோசடிக்கு அதிகாரிகளுக்கும் பங்கிருக்கும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிபிசிஐடி
இந்த நிலையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
முன்ஜாமீன் மனு
இதனிடையே உதித் சூர்யா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது தான் கல்லூரியில் இருந்து கடந்த 9-ஆம் தேதியே விலகிவிட்டதால் தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என மனுவில் கூறியிருந்தார்.
தேனிக்கு
அப்போது அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வரும் செவ்வாய்க்கிழமைக்குள் சிபிசிஐடி முன்பு ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் கைது செய்தனர். அடுத்தகட்டமாக அவரை சென்னைக்கோ அல்லது தேனிக்கோ அழைத்து சென்று விசாரணை செய்யப்படுவார் என தெரிகிறது.