திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.! ஜூலை 17 சந்திர கிரகணம்.. கோயில் நடைமுறையில் மாற்றம்
திருமலை: வரும் ஜூலை 16ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜூலை 17-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதை அடுத்து 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே, திருப்பதி கோயில் நடை அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூலை 16 அன்று சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசன டிக்கெட்டுகளை விநியோகிக்க மாட்டோம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 17-ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.23 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையடுத்து 16ம் தேதி இரவு 7மணி முதல் 17ம் தேதி காலை 5 மணி வரை 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் ஏழுமலையான் கோயில் திறக்கப்படுகிறது. அதன் பின்னர் புண்ணியா வாசனம், சுத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டு சுப்ரபாத சேவை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரகணம் காரணமாக ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும் இந்த இரு நாட்களில் மண்டபங்களில் பக்தர்கள் காத்திருக்க அனுமதி வழங்கப்படாது.
சந்திரகிரகணத்தையொட்டி அன்ன கூடமும் மூடப்படும் என்பதால் பக்தர்களுக்கு உணவு வினியோகமும் செய்யப்படாது என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது தேவஸ்தானம் நிர்வகித்து வரும் அனைத்து கோயில்களுக்கும் மேற்கண்ட நடைமுறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது
ஜூலை 17 அதிகாலையில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் மீண்டும் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.