ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திருப்பதி வருகிறார்!
திருப்பதி: திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி வரும் 9ந் தேதி திருப்பதி வருகை தர இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். கடவுள் பக்தி மிக்கவரான பிரதமர் மோடி லோக்சபா தேர்தல் முடிவுக்கு முன்னதாக கேதார்நாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அத்துடன், அங்கு நீண்ட தியானத்திலும் ஈடுபட்டார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றியை பாஜக பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து, தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார்.
அப்போதும், அங்குள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலிலும் சிறப்பு பூஜைகளுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில், வரும் 9ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிரதமர் மோடி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தர இருக்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக திருப்பதி அருகேயுள்ள ரேணிகுண்டா வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து காரில் திருப்பதி வந்து ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
அன்று மாலை 4 மணியளவில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா, திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக திருப்பதி வந்த போதும், ஏழுமலையான் கோயிலில் மோடி சாமி தரிசனம் செய்தார். 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் திருப்பதி கோயிலில் பிரதமர் சாமி தரிசனம் செய்தது நினைவுகூறத்தக்கது.