திருப்பதி சென்று ஏழுமலையான தரிசித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. விவிஐபி தரிசனத்தில் வழிபட்டார்
திருப்பதி: இரண்டு நாள்தமிழக பயணத்தை முடித்து கொண்டு ஆந்திரா சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
இறை வழிபாட்டிற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காலை மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கான விவிஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், கவர்னர் மாளிகையில் தங்கினார்.
பின்னர் நேற்று தரமணியிலுள்ள சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் ஜனாதிபதி தனது குடும்பத்துடன் நேற்று திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார்.
திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு ஏழுமலையான் கோவில் முன் வாசலை அடைந்தார். அங்கு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சம்பிரதாய இஸ்திகாபால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பலி பீடம், கொடிமரம் ஆகிவற்றை வணங்கி ஏழுமலையானை வழிபட்டார்.அப்போது தேவஸ்தான அர்ச்சகர்கள் மூலவர் திருவடியில் துவங்கி வைர கிரீடம் வரை ஏழுமலையானின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஹாரத்தி காண்பித்து ஐதீக ஹாரத்தி எனப்படும் முறையில் ஏழுமலையானின் ஒவ்வொரு உடல் பாகங்களையும் ஜனாதிபதிக்கு விவரித்து கூறினர்.
தொடர்ந்து ஜனாதிபதிக்கு கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி அனில்குமார் சின்கால் ஆகியோர் தீர்த்த பிரசாதங்கள்,நினைவு பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் ஜனாதிபதிக்கு வேத ஆசி வழங்கினர்.