நாளை திருப்பதி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி... பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரதமர் மோடி நாளை செல்வதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.
இதனையடுத்து, 2 வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி, இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது, தனது எடைக்கு இணையாக தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார் பிரதமர் மோடி. இதற்காக நாகர்கோவிலிலிருந்து 112 கிலோ தாமரை மலர்கள் வரவழைக்கப்பட்டன.
முன்னதாக, கேரளாவின் கொச்சிக்கு நேற்றிரவு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் மோடி தங்கினார். கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம், குருவாயூருக்கு இன்று காலை சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது, தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைய கேரள அரசு மறுத்து வருகிறது. ஆயுஷ்மான் திட்டத்தில் கேரள மக்கள் பயன் பெற மாநில அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், நாளை திருப்பதி திருமலையில் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் கன்னா லக்ஷ்மி நாராயணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் 9- ஆம் தேதி பிரதமர் மோடி, திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கேரள பயணத்தை முடித்துவிட்டு மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி, இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார். இலங்கைக்கு நாளை செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபரை சந்தித்து விட்டு திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்துகிறார்.
பின்னர், ரேணிகுண்டா செல்லும் மோடி, அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இதைதொடர்ந்து, அங்கிருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி, திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.