கோவிந்தா... கோவிந்தா... திருப்பதி மலை கோவிலில் ராகுல் சாமி தரிசனம்... மாலையில் பிரச்சாரம்
திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோவிலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான போர்டு சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்த அவர். அங்கிருந்து சாலை வழியாக திருமலை கோவிலுக்கு சென்றார்.
ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதன் முறையாக பணக்கார சாமியான திருமலை வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
சிறப்பு அந்தஸ்து
பிற்பகலில் வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்து ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, இன்று மாலை தாரக ராமா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். அந்த கூட்டத்தில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளார்.
மாநில பிரச்சனை
இதனையடுத்து, அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான மெய்யப்பன் தெரிவித்தார். பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, மாநில பிரச்சனைகளை குறித்து வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
ராகுல் பிரச்சாரம்
ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதே முடிவை பாஜகவுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன்வைத்து வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிடுவதாக அவ்வப்போது தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
ஆந்திராவில் சலசலப்பு
காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புகாக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக நிராகரித்தால் கடந்த தேர்தலில் கூட்டணியில் இடம் பெற்று இருந்த தெலுங்கு தேசம் கட்சி. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணிக்கு மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.